Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 17 - சரோஜா ராமமூர்த்தி
1.17. பஸ் நகர்ந்தது
டவுனில் முனிசிபல் ஹைஸ்கூலில் பாலுவைச் சேர்க்க வேண்டிய விவரங்களை விசாரித்துக் கொண்டு. பவானியும் பாலுவும் பசுமலை திரும்பும்போது மாலை ஆறு மணி ஆகி விட்டது. அன்று பகல் டவுனில் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிச் சற்று தூரம் நடந்து சென்றதும் பவானி ஒரு மரத்தடியில் தயங்கி நின்றாள். பிறகு தைரியத்துடன் மூர்த்தியைப் பார்த்து "நீங்கள் எங்களுக்காக வருகிறீர்களா? இல்லை, உங்களுக்கு ஏதாவது சொந்த வேலை இருக்கிறதா?" என்று கேட்டாள்.
மூர்த்தி உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே பவானியைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான். கபடமும் வஞ்சமும் நிறைந்த அந்த சிரிப்பைப் பார்த்ததும், பவானி மனம் வெறுத்து தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். விதவை பவானி யாருக்காக வாழ்கிறாள்? பாலுவுக்காக. அந்தக் குழந்தை படித்து முன்னுக்கு வந்தால் தான் தனக்கு இன்பம் உ.ண்டு என்று கருதுகிறவள். அவனுக்காகவே உற்றார் உறவினரை விட்டு ஒதுங்கி வாழ முயன்றவள். பின்னால் மூர்த்தி தொடர்ந்து வந்தால் அவள் வாழ்க்கை என்ன ஆவது?
அருகில் நின்றிருந்த பாலுவின் கையைக் கெட்டி யாகப் பற்றிக்கொண்டு பவானி குமுறும் மனத்துடன், ”நான் வருகிறேன். எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப் பட வேண்டாம். எனக்குத் துணை அவசியமாக இருந்தால் கல்யாண மாமாவை அழைத்து வந்திருப்பேனே! என் தகப்பனாருக்குச் சமானமாக இருக்கும் அவர் எனக்கு உதவி புரிவதையே பசுமலையில் உள்ளவர்கள் வம்பு பேசுகிறார்கள். அதனால் தான் நான் அவரையும் இன்று வரும்படி அழைக்கவில்லை" என்று சொல்லி விட்டு இரண்டடி முன்னால் நடந்தான்.
மரத்தடியில் வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி நின்றிருந்த மூர்த்தி சிகரெட் துண்டை கீழே எறிந்து காலினால் அழுத்தித் தேய்த்தான். நெற்றியில் முத்து முத்தாக அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பவானியும், பாலுவும் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
அவனிடம் இதுவரையில் யாரும் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டதில்லை. பம்பாயிலே பல வருஷங்கள் இருந்திருக்கிறான். பல குடும்பங்களுடன் பழக இருக்கிறான்.