Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 18 - சரோஜா ராமமூர்த்தி
1.18. சீர்திருத்தவாதி .....!
'கேரம்' பலகையை வெளியே எடுத்து வைத்துவிட்டு மூர்த்தி வெளியூர் போனது பாலுவுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் பத்து நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்கள். பிறகு பள்ளிக்கூடம் போகவும் பாடங்களைப் படிக்கவுமே பொழுது சரியாகிவிடும். மூர்த்தியுடன் விளையாடலாம் என்று நினைத்திருந்தான் பாலு. அவனும் ஊரில் இல்லாமல் போகவே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை .
உள்ளே பவானி ரவா தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். 'கமகம' வென்று வாசனை வீசியது. மாலை சுமார் மூன்று மணி இருக்கலாம். பாலு கால்களைச் சப்பணம் கட்டிக்கொண்டு, வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான், கல்யாணமும் பார்வதியும், யாரோ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்காகப் போயிருந்தனர். அவர்கள் போய் நான்கு தினங்கள் ஆயின. கதவைப் பூட்டிச் சாவியை மூர்த்தி வந்தால் கொடுத்து விடும்படி பார்வதி பவானியிடம் கொடுத்து விட்டுப் போயிருந்தாள்.
"அவன் என்றைக்கு வருகிறானோ" என்று கூறி விட்டு. .. நான் வந்த பிறகு பாலுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் அம்மா. ஜாக்கிரதையாக இரு" என்று கூறிவிட்டுக் கல்யாணம் புறப்பட்டார்.
"சே! சே! இதென்ன ஊர்? பகல் நேரங்களிலேயே பாழ் அடைந்து கிடக்கிறதே" என்று மனத்துள் அலுத்துக் கொண்டான் பாலு.
அடுப்பங்கரையில் அடுப்பு அணைக்கப்படும் சத்தம் கேட்டது . தட்டில் தோசைகளை எடுத்துக்கொண்டு பவானி பாலுவைத் தேடிக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். பின்னர், தெருப்பக்கம் சென்று பார்த்தாள். திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாலுவைப் பார்த்து. ”பாலு எழுந்திருந்து உள்ளே வந்து தோசை சாப்பிடு" என்று அழைத்தாள்.
கூடத்தில் தோசைத்தட்டின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டான் பாலு. பவானி கடைந் தெடுத்த வெண்ணெயை உருட்டி எடுத்து வந்து அவன் தட்டில் போட்டாள். அவன் தோசைகளை விரும்பிச் சாப்பிட்ட... தாகம் பவானிக்குத் தோன்றவில்லை.