(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 20 - சரோஜா ராமமூர்த்தி

1.20. மூர்த்தியின் ஏமாற்றம்

  

சுமலை ரயில் நிலையத்துக்குப் பாசஞ்சர் வண்டி காலை பத்தரை மனிக்கு வருவது வழக்கம். சாதாரணமாகவே பத்தரை மணி வண்டி. பன்னிரண்டு மணிக்குத் தான் வரும். பத்தரை மணி வண்டியைப் பிடிக்க ரயிலடிக்குப் பதினொன்றரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்,

  

பார்வதி, பவானி- பாலுவிற்காகச் சிறந்த விருந்து ஒன்று தயாரித்தாள். பரிந்து பரிந்து உபசரித்தாள். பவானியின் மனநிலை விருந்துண்ணும் நிலையில் இல்லை. 'கோமதியின் உடல் நிலை எப்படி இருக்கிறதோ' என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தாள்.

  

"அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவ்வளவு பெரிய நகரத்தில் வைத்தியர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் பஞ்சமா என்ன? நிதானமாகச் சாப்பிடு" என்று உபசரித்தாள் பார்வதி.

  

பாலு ஊரில் ஒரு பையன் பாக்கியில்லாமல் தான் சென்னைக்குப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.

  

ஒரு வேலை அங்கேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். மாமாவுக்குக் கார் இருக்கிறது. எங்கள் சுமதி ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போவாள் " என்றெல்லாம் அவர்களிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ஒவ்வொருவரும் அவனுக்குத் தத்தம் நினைவாக ஒருபொருளைப் பரிசாகக் கொடுத்தனர். கோலிகளும், பம்பரங்களும், கதைப் புத்தகங்களும் ஏகப்பட்டவை பாலுவுக்கு கிடைத்தன.

  

பவானி ஊருக்குக் கிளம்பும் விஷயம் சேஷாத்ரிக்கு எட்டியது. அந்தக் கிழவர் இரண்டு சீப்பு வாழைப் பழங்களுடன் பாலுவைப் பார்க்க வந்தார்.

  

ஏனம்மா! நாலு தினங்களுக்கு முன்பு உன்னிடம் சொன்ன வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது பார். நல்ல பெண் நீ. அடக்கத்துக்கும் பண்புக்கும் உதாரணமாக இருந்தாய். ஊருக்குப் போகிறாயே என்று தான் இருக்கிறது. பையனை ஜாக்கிரதையாகப் பார்த் துக்கொள். சௌக்கியமாக போய் வா" என்று விடை கொடுத்தார்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.