Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 03 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 3 -- மர்ம மங்கை
ராமப்பட்டணம் அனுமார் வீதியில் ஒரு கட்டிடத்தின் வாசலில் 'சமூக சேவா சங்கம்' என்று தமிழிலும் அதற்கு மேலே 'Social Service Club' என்று ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை எழுதி மாட்டி யிருந்தது.
பவானி இந்த இடத்துக்கு வந்ததும் சுற்றுச் சுவர் கேட்டருகே தயங்கி நின்றாள். கட்டிடத்தின் முன்புறம் டென்னீஸ் கோர்ட் டில் ஆடி விட்டு வியர்வையை ஒரு டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டே அப்பால் புல்வெளியில் போட்டிருந்த சாய்வு நாற்காலிகளை நோக்கி நடந்தார் மாஜிஸ்திரேட் கோவர்த்தனன்.
அப்போது அவர் பார்வை வீதி ஓரமாய் நின்று பெயர்ப் பலகையை அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்த பவானி பேரில் விழுந்தது. உடனே, "உள்ளே வரலாமே?" என்றார். "அங்கத்தினர்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டோ என்னமோ என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன்." பவானி பேசியபடியே முன்னேறி அவரை நோக்கி நடந்தாள்.
நாற்காலி ஒன்றை அவளுக்காக இழுத்துப் போட்டு விட்டு, "அதற்கென்ன நீங்களும் அங்கத்தினராகி விட்டால் போகிறது" என்றார் கோவர்த்தனன்.
பையனை ஜாடை காட்டி அழைத்து, இரண்டு ஸ்பென்ஸர் லெமனேட் கொண்டுவரச் சொன்னார். கூடவே, "ஐஸ் போடலாமல்லவா?" என்று பவானியைக் கேட்டார்.
"எனக்குப் போடலாம்; உங்களுக்கு வேண்டாம்" என்றாள் பவானி. "இன்னும் வியர்வை கூட அடங்க வில்லையே?"
அந்தக் கரிசனம் அவரை ஒரு வினாடி திகைக்க வைத்தது. "தாங்க்ஸ்" என்றார் புன்னகையுடன். அவர் அவளை அப்போது பார்த்த பார்வையில் நன்றி உணர்ச்சிக்கும் அதிகமாக ஏதோ ஒன்று இருந்தது. அவள் யோசனைப்படியே பையனுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
"பெண்களை இந்தக் கிளப்பில் சேர்த்துக் கொள்கிறீர்களா?" என்று பவானி உரையாடலில்