Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 06 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 6 -- கோபம் தணிந்தது
விசுவும் கமலாவிடம் தலைவாரிக் கொள்ளச் சீப்புக் கேட்டான். அவள், "இப்போ கொடுக்க முடியாது" என்றாள். "அப்புறம் அம்மாவிடம் சொல்லிவிடுவேன்!" "சீ பேசாமலிருடா." "அம்மா! கமலா அதற்குள் அலங்காரம் பண்ணிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். எதற்காகத் தெரியுமா?"
"சீ, சும்மா இருடா!" என்றாள் கமலா கையை ஓங்கிச் சீப்பை அவன் மேல் கோபத்தில் விட்டெறிந்தாள்.
விசுவம் அதை லாகவமாகப் பிடித்துக் கொண்டு, "கொடுத்துட்டியே, எனக்குக் கிடைச்சுடுத்தே" என்றான். அவள் அவனைத் தாவிப் பிடிக்க வந்தபோது நழுவி வாசல் புறம் ஓடினான்.
அங்கே கல்யாணசுந்தரமும் வீட்டுச் சொந்தக்காரர் ரங்கநாதனும் வந்து கொண்டிருந்தனர். விசு ரங்கநாதன் மீது முட்டிக் கொண்டான்.
அவர், "இது என்ன அக்கிரமம்? வீடு திறந்திருக்கிறது; என் உத்தரவின்றி யாரோ என் வீட்டை ஆக்கிரமித்தது மட்டுமின்றி இப்படி என்னையே உள்ளே வர விடாமல் மோதி வதைக்கிறார்களே" என்றார்.
கல்யாணமும் வியப்படைந்தவனாக விசுவைப் பிடித்து நிறுத்திக் கொண்டு, "கதவு எப்படித் திறந்தது?" என்று கேட்டான்.
"எனக்கு மந்திரம் தெரியும் மாமா! 'ஓபன் ஸீஸேம்' என்றேன்! கதவு திறந்து கொண்டது."
"பார்த்தீர்களா பையனின் கெட்டிக்காரத்தனத்தை" என்று கல்யாணம் மெச்சிக் கொண்டான்.