Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 11 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 11 -- சிலிர்ப்பும் சினமும்
ஞாயிற்றுக் கிழமை முழுவதும் சமூக சேவா சங்கக் கட்டடம் திமிலோகப் பட்டது. ஒத்திகை நடந்த நேரம் பாதி. அரட்டையிலும் தமாஷ் பேச்சிலும் கழிந்த நேரம் பாதி. பவானி தங்களுடன் வந்து சகஜமாகப் பழகி நாடகத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டதில் அனைவருக்கும் ஒரே ஆனந்தம். பதினெட்டு மணி நேரம் இருந்த இடத்தை விட்டு நகராமல், சீட்டாடி 'ரிக்கார்டு' ஏற்படுத்தியிருந்த பத்மனாபன் கூடச் சீட்டாட் டத்தைச் சற்று மறந்து நாடக ஒத்திகையைப் பார்க்க வந்து விட்டாரென்றால் அதற்குப் பவானியின் தோற்றத்திலும் சுபாவத்திலும் இருந்த வசீகர சக்திதான் காரணம். அந்தச் சங்கத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் ஏதோ தேவேந்திர பதவி கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்து கொண்டிருக்க, கோவர்த்தனன் மட்டும் இருக்கிற பதவியையும் இழந்து விட்டவர் போல் முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
அந்தப் பக்கமாகப் போன ஒரு வழக்கறிஞரை அழைத்து, "என்ன மிஸ்டர் சேஷாசலம்! என்னமோ நாடகமாமே? நல்ல தங்காள் கதையா? அரிச்சந்திரன் வரலாறா?" என்று கேட்டார்.
"சே! அதெல்லாம் பழம் காலம்னா! இப்பல்லாம் சமூகக் கதைதான் எடுக்கும்" என்றார் சேஷாசலம்.
"ஓகோ! காதலித்த கமலாசினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாத கதாநாயகன் ஒப்பாரி பாட்டுப் பாடியபடியே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறானா?" என்றார் ஏளனமாக, கோவர்த்தனன்.
மாஜிஸ்திரேட்டின் மனநிலையை அவரது பேச்சின் தோரணையிலிருந்து புரிந்து கொண்டுவிட்ட சேஷாசலம், அவர் போக்கிலேயே பேசி நல்ல பெயர் தட்டிக் கொள்ளப் பார்த்தார்.
"அப்படி ஏதாவது நவீனக் காதல் கதையாக இருந்தாலும் தேவலாமே. இவர்கள் காந்தி பக்தர்களோல்லியோ? அதனால் சமூக சேவை பற்றிய இலட்சிய நாடகம் போடுகிறார்கள்."
"பலே, பலே! சமூக சேவையா? விதவைகளுக்கெல்லாம் பொட்டு வைத்து