Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 12 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 12 -- யாரை நம்புவது?
பவானியை அவள் வீட்டில் இறக்கிவிட்ட கல்யாணம், நேரே தன் இல்லத்துக்குத் திரும்ப மனம் இல்லாமல் மாசிலாமணி குடும்பம் இறங்கியிருந்த ஜாகைக்குப் போனான்.
ரங்கநாத முதலியாரின் அந்தப் பழைய வீட்டில் கமலா சுவரில் ஆணி அடிக்க முயன்று கொண்டிருந்தாள். விசுவம் சில படங்களை வைத்துக் கொண்டு நின்றான்.
கல்யாணத்தைப் பார்த்ததும் சற்று பயந்து போன விசு, "பாருங்கள் மாமா! ஆணி அடிக்கக் கூடாது என்று இந்த வீட்டுக்காரர் சொன்னாரில்லையா? அக்கா கேட்ககே மாட்டேனென்கிறாள்" என்றான்.
"ஒன்றிரண்டு ஆணிகள் அடித்தால் பாதகமில்லை. அவர் வந்து கேட்டால் என்பேரில்பழியைப் போடு. நான் தான் ஆணி அடித்ததாகச் சொல்லிவிடு.
"பொய்யா சொல்லச் சொல்கிறீர்கள்?"
"வேண்டாம். அதையே நிஜமாக்கிவிட்டால் போச்சு" என்றான் கல்யாணம்.
"நல்ல காரியம். நீங்களே ஆணி அடித்து விடுங்கள். அக்கா அப்பவே பிடித்து ஆணி அடிக்கிறாள், அடிக்கிறாள், இன்னும் ஒரு ஆணி கூட அடித்தபாடில்லை."
"இங்கே வா, உன் முதுகிலே நாலு அடி அடிக்கிறேன்" என்றால் கமலா.
கல்யாணம் அவளிடமிருந்து சுத்தியையும் ஆணிகளையும் வாங்கிக் கொண்டான். "உன்னால் முடியாது, நான் அடித்துத் தருகிறேன்" என்றான். ஸ்டூல் மீது ஏறி, "இதோ பார்த் தீர்களா? இப்படிப் பிடித்துக் கொண்டு இப்படி அடிக்க வேண்டும்" என்று கூறிய படியே அடிக்க ஆரம்பித்தான்.
பிறகு ஒவ்வொரு முறை அடிக்கும்போதும், 'இது மாஜிஸ்திரேட் பதவிக்கு விழும் அடி, இது