Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 16 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 16 -- ஜின்னா தோற்றார்!
வந்தவள் பவானி. அவள் சற்று நின்று பார்த்துவிட்டுப் பெஞ்சில் அமர்ந்தாள். அப்படியும் முதலியார் தலை நிமிரவில்லை. தொண்டையைக் கனைத்துக் கொண்டு "வக்கீல் ஸார் ரொம்பப் பிஸியாக இருக்கறாப் போலிருக்கு" என்றாள் பவானி.
முதலியார் நிமிர்ந்து பார்த்துத் திடுக்கிட்டார்.
எழுந்து நின்று, "வரணும் வரணும்... நீங்க வந்ததை நான் பார்க்கவே இல்லை. என்ன சேதி? எப்போ வந்தீங்க? அடே நாற் காலி! பியூனைக் கொண்டாடா! சேச்சே! அடே பியூன் நாற்காலி கொண்டாடா!"
"வேண்டாம். பெஞ்சே சௌகரியமாயிருக்கு" என்றாள் பவானி.
"அந்த மடையன் பியூன் யாராவது வருகிற சமயம் பார்த்து எங்கேயாவது தொலைஞ்சு போயிடறான். குமாஸ்தாவுக்கு இன்றுதான் திவசம். அவனும் வரவில்லை.
"குமாஸ்தாவுக்கா ஸார் திவசம்? காலமாகி ரொம்ப நாள் ஆச்சோ?"
"இல்லை; இல்லை. குமாஸ்தாவின் தாயாருக்குத் திவசம். அது போனால் போகட்டும். எங்கே வந்தீர்கள்? என்ன விஷயம்?"
"ஒன்றுமில்லை ஸார்! சும்மாத்தான். புது கார் இப்பத்தான் வந்தது. ஒரு டிரைவ் போகலாம் என்று கிளம்பினேன். இந்த ஊரில் என்ன மெரீனாவா? மவுண்ட் ரோடா? என்ன இருக்கிறது. புதுக் காரைப் பெருமையுடன் ஓட்டிப் போக? பெரும்பாலும் கூடைப் புழுதி எழுப்புகிற கப்பி ரோடுதான். ஆகவே ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஜம்பம் அடித்துக்கொண்டு வரலாமே என்று தோன்றியது. புறப்பட்டு விட்டேன். உங்க மகன் கல்யாணத்திடமும் சொல்லியிருந்தேன். புதுக்கார் வரப்போகிறதென்று." "ஐஸீ." அவன் மெட்ராஸ் போயிருக்கான்."