Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 17 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 17 -- "உனக்கும் காதலா?
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து பவானி வெளியே வந்தபோது தன் காரில் டிரைவர் ஆசனத்தில் யாரோ உட்கார்ந்திருப்பது சாலை விளக்கின் மங்கிய ஒளியில் அவளுக்குத் தெரிந்தது. காரைப் பூட்டாமல் சாவியை மட்டும் எடுத்துக் கொண்டு போனது தவறு என்று தோன்றியது. கூடவே அனுமதி இன்றிக் காருக்குள் ஏறி அமர்ந்திருக்கும் நபர்மீது கோபமும் பொத்துக் கொண்டு வந்தது. ஒரு வக்கீலின் வாதத் திறமைகளை யெல்லாம் காட்டி அவனுடன் சண்டை பிடிக்கும் நோக்கத்துடன் அவள் பரபரப்பாக அடியெடுத்து வைத்தாள். ஆனால் காரை நெருங்கியபோது அது சிறுவன் விசு என்பதையும் அவன் புதுக் காரைத் தான் ஓட்டுவதாகக் கற்பனை செய்து கொண்டு "டிர்ர்ர்....டிர்ர்!" என்று சத்தப்படுத்தியபடியே ஸ்டியரிங்கை அசைப்பதையும் கண்டாள். அவளுக்குக் கோபிக்க மனம் வரவில்லை. என்றாலும் விளையாட்டாக "யாருடா அவன், காரிலே விஷமம் பண்ணுகிறது! போலீஸைக் கூப்பிடட்டுமா?" என்று அதட்டினாள்.
"ஓ, பேஷாகக் கூப்பிடு, பவானி அக்கா! சாலையின் வலது பக்கம் வண்டியை நிறுத்தியிருக்கிறாயே, வந்து பார்க்கட்டும். போலீஸ் இன்ஸ்பெக்டர். பத்து ரூபாய்தான் ஃபைன். பவானி பி.ஏ. பி.எல். லின் வாதத் திறமை ஒன்றும் அங்கே பலிக்காது!" என்றான் விசு.
"அட போக்கிரி! ரூல்ஸ்ஸெல்லாம் நல்லாத் தெரிந்து வைத்திருக்கிறாயே!" என்றாள் பவானி.
"அது மட்டுமில்லே. கார் ஓட்டவே எனக்குத் தெரியும். ஆனால் சாலை தெரிந்தால் கால் எட்டாது. மற்றப்படி கியர், பிரேக், கிளச் சப் ஜாடா கச்சிதமா எனக்குத் தெரியும்."
"பலே பேஷ்! கெட்டிக்காரன் தான். நகரு சொல்கிறேன். உன்னை வீட்டில் விட்டு விட்டுப் போகட்டுமா?"
"சரி அக்கா." அவன் நகர்ந்து கொண்டான். "ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு வரட்டுமா?"
"ஐய்யய்யோ! புது கார்! எங்கேயாவது மோதிவிட்டால்?"