Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 18 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 18 -- அந்தப்புரத்தில் அரசிளங்குமரிகள்
"வாம்மா பவானி! இந்த ஊர் எல்லைக்குள் நுழைந்ததுமே மகா லட்சுமி மாதிரி எதிரே வந்து நின்றாய். உடனேயே ஜாகை வசதி கிடைத்தது. அந்தப் பிள்ளை கல்யாணம் தங்கக் கம்பி. ரொம்ப ஒத்தாசையாக இருக் கிறான்" என்று கூறிப் பவானியை வர வேற்றாள் காமாட்சி.
"இன்னும் உங்களுக்கு என்னென்ன உதவி வேணுமோ எல்லாவற்றையும் அவரையே கேளுங்கள்" என்றாள் பவானி.
"அப்படி ஒண்ணும் அதிகமாக உபகாரம் தேவையில்லை. விசுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, 'அவன் அப்பாவுக்கு ஓர் உத்தியோகத்தைப் பார்த்துக் கொடுத்து, இந்தப் பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி வைச்சுட்டாப் போதும்."
"முதல் இரண்டு காரியங்களும் கஷ்டப் படலாம். மூன்றாவது முடிந்த மாதிரிதான். கட்டாயம் சுலபமாக நடந்துவிடும். கல்யாண சுந்தரம் இருக்கிறாரே அவரே பிரும்மச்சாரி தான். உங்கள் பெண்ணுக்குத் தகுந்த வரன்."
"ஆனால் அவர்கள் குடும்பம் பணக்காரக் குடும்பம் அது இது என்கிறார்களே."
"அதனால் என்ன? மிஸ்டர் கல்யாணசுந்தரத்துக்கு ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமே கிடையாது. தீவிர சோஷலிஸ்ட் அவர் அப்பா மட்டும் தடுக்கவில்லை என்றால் சொத்தை யெல்லாம் தானம் பண்ணி விடுவார். நாட்டில் ஏழைகள், பரம ஏழைகள் என்ற இரண்டே வகுப்பார்தாம் இருக்க வேண்டும் என்பது அவர் சித்தாந்தம். அந்த அளவுக்குச் சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்டவர். உங்கள் பெண்தான் என்ன சாமானியப்பட்டவளா, அவள், அழகு, சமர்த்து, அறிவு, படிப்பு..."
"கடைசியாகச் சொன்னது மட்டும் அக்காவிடம் கிடையாது. பூஜ்யம்" என்றான் விசு.
"தடிப்பயலே! சும்மா இரு. நீ ஒருத்தன் படித்துக் குப்பை கொட்டினால் போதும்" என்றார் மாசிலாமணி.