Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 19 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 19 -- இன்னொருவர் ரகசியம்
கமலாவை அவள் இல்லத்தில் விட்டு விட்டுப் பவானி வீடு திரும்பியபோது இருட்டி வெகு நேரமாகி விட்டிருந்தது. பவானியின் மாமா குணசேகரன் கவலையோடு வாசலிலேயே காத்திருந்தார். "என்னம்மா, கால தாமதமாகுமென்றால் வழக்கமாய்ச் சொல்லி விட்டுப் போவாயே? நெஞ்சைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறேன். பெற்றோரை விட்டு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு இப்பால் என் பொறுப்பில் வந்து சேர்ந்திருக்கிறாயே?" என்றார்.
"எதிர்பாராமல் தாமதமாகி விட்டது, மாமா! அந்தப் பெண் கமலா இருக்கிறாளே, அவளோடு மலைச்சாரலுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு சுவாரசியத்தில் பொழுது போனதே தெரியவில்லை. இருள்கிறது, கிளம்பலாம் என்று நான் எண்ணிய சமயம் அந்தப் பெண் 'ஓ' வென்று அழ ஆரம்பித்து விட்டாள். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது."
"அட பாவமே! எதற்கு அழுதாள் குழந்தை?"
"குழந்தையா? நாலு குழந்தைகளுக்கு அவளே தாயாக இருக்கக் கூடிய வயசு!"
"இருக்கட்டுமே. பெற்றோருக்கு அவள் எப்போதும் குழந்தைதான். நீகூடத்தான் இருக்கிறாய். கல்யாண வயதாகவில்லையா உனக்கு? எனக்கு என்னமோ இன்னமும் குழந்தையாகவே தோன்றுகிறாய். அதனால் தான் உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஞாபகமே இன்று மாலை வரையில் ஏற்படவில்லை.
"அடடே! இன்று சாயந்திரம் மட்டும் போதி மரத்தின் அடியில் போய் அமர்ந்தீர்களாக்கும்!" என்று கூறிய பவானி சிரித்தாள்.
"ஞானோதயம் என்னை நாடி வந்தது. பவானி! மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் உருவில் வந்தது!"
"அதுதானே பார்த்தேன். இல்லாத போனால் உங்கள் தங்கமான மனத்தில் அசட்டு யோசனைகள்