Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 21 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 21 -- பயங்கரக் கனவு
சில நாட்களாக உமாகாந்தன் கல்லூரிக்கு வரவேயில்லை. பவானி அவனை வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் காத்திருந்து காணாமல் கலங்கினாள். கல்லூரி முழுவதும் தினம் ஒரு முறை சுற்றிவந்து தனது சித்திரக் கண்களின் வட்டக் கருவிழிகளைக் கள்ளத்தனமாகச் சுழல விட்டுத் தேடினாள். அகப்படவில்லை. நெடுமூச்சுக்கள் நெஞ்சை வாட்ட அவனது வகுப்புக்கேகூடப் போய் ஜாடையாகப் பார்த்தாள். ஊஹூம், அங்கேயும் அவன் இல்லை.
'ஏதாவது அவசர காரியமாக ஊருக்குப் போக நேர்ந்திருக்கும். நாளை அல்லது மறு தினம் வந்து விடுவார்' என்று சமாதானப் படுத்திக் கொண்டாள். 'லீவு லெட்டர் ஏதாவது வந்திருக்கிறதா?' என்று கல்லூரிக் காரியாலயத்தில் விசாரிக்க அவளுக்குச் சங்கோசமாக இருந்தது. 'நீ யார்? எதற்காகக் கேட்கிறாய்?' என்ற கேள்வி பிறந்தால் என்ன பதில் சொல்வது என்று குழம்பினாள்.
'ஒருவேளை அவருக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமோ? கடுமையான ஜுரம் கண்டு படுத்த படுக்கையாக இருக்கிறாரோ?' என்று இரவெல்லாம் கற்பனைகளில் ஆழ்ந்து தூக்கம் பிடிக்காமல் தவித்தாள்.
ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு இந்த நிச்சய மற்ற நிலையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது எனத் தீர்மானித்தவளாய் நேரே உமாகாந்தின் வீட்டுக்கே போய்ச் சேர்ந்தாள்.
அங்கே அவள் கேள்விப்பட்டது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை. ஆனால் வருத்தமாய் இருந்தது. அதே சமயம் பெருமையாகவும் இருந்தது. உமாகாந்தின் அப்பா அவளை வரவேற்றார். கல்லூரி முதல்வருக்கே தாம் கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்.
"இருக்கலாம், ஸார்! ஆனால் மாணவர்களுக்கு அந்த விவரம் ஏதும் தெரியவர நியாயமில்லையே? அவர் ரொம்பப் 'பாப்புலர்'. அதனால் மாணவ மாணவியர் எல்லாருமே அவர் கல்லூரிக்கு வரக் காணோமே என்று கவலைப்படுகிறார்கள். விவரம் அறிந்துவர என்னைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்."