Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 23 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 23 -- கமலாவின் கள்ளம்!
சொட்டச் சொட்ட நனைந்திருந்த கமலா 'வெட வெட' வென்று நடுங்கிக்கொண்டு மிருந்தாள். பயத்தினால் அல்ல; அவளுக்கு நீந்தத் தெரியும். மேலும் கிணற்றில் மூழ்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது! அதிகமாக அதில் ஜலம் இல்லை. கிணற்றின் சுவரில் குடம் அடிபட்டுக் குடம் நசுங்கிப் போயிருந்தது. அதைக் கண்டு காமாட்சி அம்மாள் கூச்சல் போடத்தான் போகிறாள். ஆனால் கமலா நடுங்கியது அதற்காகவுமல்ல.
அப்படியானால் அவள் மேனியெல்லாம் குடுகுடுப்பாண்டியின் கை உடுக்கை போல் மாறிய தற்குக் காரணம் என்ன?
கல்யாணம் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்ததுதான்!
"ஐயோ!" என்று கமலாவின் குரல் கேட்ட மறு கணம் அவன் ஓடோடி வந்து கிணற் றுக்குள் இறங்கினான். "பயப்படாதே" என்று சொல்லி அவளைப் பற்றித் தூக்கி விட்டான். கிணற்றுப் படிகளைப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிவர உதவினான். இருவரும் வெளியே வந்த பிறகு தாம்புக் கயிற்றைச் சரிசெய்து குடத்தையும் இழுத்து வெளியே கொணர்ந்தான்.
'ஆபத்துக்குப் பாபமில்லை' என்ற கருத்தில் கல்யாணம் சற்றும் தாமதியாமல் கமலா கரையேற உதவியபோது, அவன் கரங்கள் அவள் தேகத்தைத் தீண்டிய இடங்கள் இப்போதும் அவளுக்கு இன்பலாகிரியை அளித்துக் கொண்டிருந்தன. அந்த இன்ப வேதனையே குற்ற உணர்வுடன்கூடிய பயமாகவும் மாறி அவளை உலுக்கி எடுத்தது.
தனக்கு நீந்தத் தெரியும் என்று அவள் ஏன் கூறவில்லை? தான் பயப்படவில்லை என்று அவள் ஏன் காட்டிக் கொள்ளவில்லை? கிணற்றுப் படிகளில் கால் வைத்துத் தன்னால் அவன் உதவி இன்றியே கரையேறிவிடமுடியும் என்று அவள் ஏன் அவனுக்கு உணர்த்தவில்லை?
அவன் வந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். அதற்கேற்ப நடித்தாள். அவன் தன்னைத் தொட்டுத் தூக்க அனுமதித்தாள்.