Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 28 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 28 -- வளமான வாழ்வா? வறுமையா?
விருந்தினர் அறை, ஆபீஸ் அறை, சமையல் அறை, உக்கிராண அறை என்று கீழே பல அறைகளைக் காண்பித்துவிட்டு அவர்களை மாடிக்கு அழைத்துப் போனார் ரங்கநாதன். அங்கே பிரும்மாண்டமான கட்டில்கள் போடப்பட்டிருந்த இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில், ஓர் ஓரமாகக் கனமான எஃகு அலமாரி ஒன்று இருந்தது. 'அதைத் திறந்து காட்ட மாட்டாரா? என்ற ஆவல் குறுகுறுப்பை அடக் கிக் கொள்ள முடியாதவளாகக் காமாட்சி அம்மாள் அதன்பால் அவர் கவனத்தை ஈர்த்துப் பேசினாள். "நல்ல கனமான இரும்பு பீரோவாகவே வாங்கிட்டீங்க போலிருக்கு. அருமையான யோசனைதான். மர அலமாரி யெல்லாம் எத்தனை நாளைக்கு உழைக்கப் போகிறது?"
"உழைக்கிறதாவது, உளுக்கிறதாவது? அதுவா பிரச்னை? இரண்டு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை யாராவது மர அலமாரியில் வைத்துப் பூட்டுவாங்களா?" என்றார் ரங்கநாதன்.
காமாட்சிக்கு அப்போதே மூர்ச்சை போட்டுவிடும் போலாகிவிட்டது. நகைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலைதான் அவளை மயங்கிச் சாயாமல் நிற்க வைத்தது.
"இருக்கும், இருக்கும். பரம்பரையாக வந்த நகைகளுக்கு அந்த மதிப்பு இருக்காதா?" என்றாள்.
"பரம்பரை நகைகளும் இருக்கின்றன. நானே செய்ததும் உண்டு. ஏதோ கல்யாணம் செய்து கொண்ட புதுசில் ஆசையாய்ப் பண்ணிப் போட்டு அழகு பார்த்தேன். அவள் என்னடா என்றால் இத்தனை ஐசுவரியத்தையும் அனுபவிக்க ஒரு வாரிசைக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாள். யாராவது தூரத்துத் தாயாதிக்காரர்கள்தான் வந்து அத்தனையையும் கொண்டு போவாங்க போலிருக்கு."
"என்னத்தைச் சொல்றது போங்க. ஆண்டவன் லீலையே இப்படித்தான். ஒன்று கொடுத்தா இன்னொண்ணு தரமாட்டான். சொத்து இருந்தா சந்ததி இல்லை. சந்ததி இருந்தால் சொத்து இல்லை!"