Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 29 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 29 -- சிறைக் கைதியும் வீட்டுக் கைதியும்
ரங்கநாதன் வீட்டில் மாசிலாமணி தம்பதிக்கு ராஜோபசாரம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பவானியும் கமலாவும் அவர்கள் வழக்கமாகப் பலமுறை அமர்ந்து அளவளாவிய அதே மொட்டைப் பாறையில் மறுபடியும் சந்தித்துக் கொண்டார்கள்.
கமலா, இரவு சமையலுக்குத் தீப்பெட்டியும் மலிவாக ஏதாவது காய்கறியும் வாங்கி வர வேண்டியிருப்பதாகத் தம்பி விசுவிடம் கூறிவிட்டுப் புறப்பட்டிருந்தாள். "வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். உள்பக்கம் தாளிட்டுக் கொள். ஜன்னல் வழியாக வெளியே பார்த்து இன்னார் என்று தெரிந்து கொண்ட பிறகே கதவைத் திறக்க வேண்டும். சமர்த்தாக இருந்தால் நான் வரும்போது சாக்லேட் வாங்கிக் கொண்டு வருவேன்" என்றெல்லாம் படித்துப் படித்துப் பலவிதமாகவும் சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தாள்.
பவானியோ கோர்ட் முடிந்ததும் காரில் ஏறியவள், வீட்டுக்குப் போகாமல், உமாகாந்தின் நினைவு இதயத்தை முழுமையாக ஆக்கிர மித்துக் கொள்ள ஏலமலைப் பாதையில் அதனை ஓட்டிச் சென்றாள். பஸ்ஸில் வந்து சேர்ந்திருந்த கமலா அந்தப் பாறையில் ஏற்கனவே அமர்ந்திருக்கக் கண்டு, "அடடே! நீ இங்கே எப்போது எதற்காக வந்து சேர்ந்தாய்?" என்று கேட்டாள்.
"வந்து பத்து நிமிஷங்கள் ஆயிற்று. என் தலைவிதியை நினைத்து அழுவதற்குத்தான் வந்தேன்" என்றாள் கமலா. "நீங்கள் எதற்கு வந்தீர்கள்?"
"நான் தலைவிதியை நினைத்து அழுபவர்களைத் தேற்றுவதற்கு வந்தேன்!"
"குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவது என்று கேள்விப்-பட்டிருக்கிறீர்களா?"
"நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்கிறாயா? உன் மனத்தில் யார் இந்த எண்ணங்களை விதைத்தார்கள்? உனக்காக நான் கல்யாணத்தினிடம் எவ்வளவு தூரம் வாதாடியிருக்கிறேன், தெரியுமா?"