Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 31 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 31 -- மனையாள் ஆட்சி
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் தம் அறையில் உட்கார்ந்து ஹைகோர்ட் வழக்குகள் அடங்கிய தடிமனான புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் சன்னக் குரலில் பலமாகத் தலையாட்டியபடி ஆபோகி ராகத்தை ஆலாபனை செய்து கொண்டும் இருந்தார்.
எதிரே ஒரு பட்டிக்காட்டான் பெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் இப்படியும் அப்படியுமாகப் புத்தகத்தைப் புரட்டிவிட்டு 'டப்'பென்று அதை மூடியதும் தூசி எழும்பி அவரைத் தும்ம வைத்தது. கைக்குட்டையைத் தேடி அது அகப்படாமல் மேல் துண்டில் மூக்கைச் சிந்தித் துடைத்துக் கொண்டார். நடுவிரலால் சரிந்திருந்த மூக்குக் கண்ணாடியைத் தூக்கி விட்டுக் கொண்டு எதிரேயிருந்த பட்டிக்காட்டானைப் நிமிர்ந்து பார்த்தார்.
"என்னங்க, சொல்லுது, புத்தகம்? நம்ம வழக்குகுச் சாதகமாகத்தானே பேசுது?" என்று கேட்டான் அவன்.
"உம்... ஒண்ணு ரெண்டு பாயிண்ட் பாதகமாக இருக்கு. மற்றப்படி பரவாயில்லை. எல்லாம் வாதாடற விதத்திலேதான் சமாளிக்கணும்."
"ஐயாவுக்குத் தெரியாதுங்களா?"
"அது சரி, நீ இந்நேரம் சொன்னதெல்லாம் சத்தியம்தானே?"
"ஆமாங்க, மாரியாத்தா மேலே ஆணையா சொல்றேன்."
"பின்னே, கேஸ் தானே ஜெயிச்சுடறது.ஏன் கவலைப்படறே?"
உள்ளே பாத்திரங்கள் 'தடார் புடார்' என்று உருளும் சத்தம் கேட்டது. ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் கண்களை மூடி ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் நெற்றி யில் வைத்துச் சதையைக் கிள்ளிப் பிடித்துக் கொண்டு பெருமூச்சுடன் கோபத்தையும்