Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 32 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 32 -- கமலாவின் கடிதம்
"மகாஶ்ரீஶ்ரீ கல்யாணம் அவர்களுக்கு, அடியாள் கமலா எழுதிக் கொண்டது..."
"திருவாளர் கல்யாணம் அவர்களுக்கு அபாக்கியவதி கமலா அநேக கோடி நமஸ்காரங்கள்....."
"வணக்கம்... இந்தக் கடிதம் தங்களுக்கு வியப்பளிக்கலாம்..."
இப்படிப் பலவிதமாகக் கடிதம் எழுத ஆரம்பித்துக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருந்தாள் கமலா. நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் பாதித் தாள்களுக்கு மேல் அடுப்பெரிக்கக் குவிந்துவிட்டன. பாக்கிப் பத்துத் தாள்களைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, 'இதுதான் கடைசி முயற்சி' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.
"என் இன்னுயிர்க் காதலர் கல்யாணம் அவர்களுக்கு,
ஆம், இந்தக் கடிதத்திலாவது ஒரே ஒருமுறை இப்படித் தங்களை அழைக்க அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறேன். தயவு செய்து இந்தக் கடிதத்தைப் படித்து முடித்த தும் உடனடியாகக் கிழித்துப் போட்டுவிடுவதுடன் என்னைப் பற்றிய நினைவுகள் தப்பித் தவறித் தங்கள் மனத்தில் ஏதும் இருந்தால் அவற்றையும் அழுத்துவிடுமாறு கோருகிறேன்.
இக்கடிதம் தபால் மூலம் தங்களுக்கு வந்துசேரும்போது நான் இந்த ஊரைவிட்டோ அல்லது உலகை விட்டோ (எது என்று இன்னும் முடிவு செய்யவில்லை) கிளம்பிப் போய் நீண்ட நேரமாகி விட்டிருக்கும்.
சிறு வயதிலிருந்தே பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் வியக்க விளங்கப் போவதாகக் கனவு கண்டவள் நான். கடைசியில் அடுப்பு ஊதுவது தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவள் என்பதாக என் தாய் தகப்பனார் தீர்மானித்து விட்டனர். தங்களை முதன் முதலாகப் பார்த்த கணத்திலிருந்து பட்டம் பதவியெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம் தங்கள் மனைவி என்ற பட்டமும் தங்கள் இதய சிம்மாசனப் பதவியும் கிடைத்தாலே நான் பெரிய பாக்கியசாலி என்று கருதினேன். அதற்கும் நான் கொடுத்து வைக்கவில்லை.