Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 33 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 33 -- "சம்மதம்!"
கமலா! பிறர் கடிதங்களைப் படித்துப் பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்குக் கிடையாது!"
கமலாவுக்குத் திடீரென்று துணிச்சல் எப்படித்தான் வந்ததோ? கிண்டலும் கேலியும் கோபமும் ஆங்காரமும் கொப்பளிக்க, "அடடா, அது எனக்குத் தெரியாதா? நீங்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! உங்களுக்கெல்லாம் அற்பத்தனமான கெட்ட பழக்கங்கள் இருக்குமா என்ன?" என்றாள்.
ரங்கநாதன் சிரித்தார். "புரிகிறது கமலா, நையாண்டி நன்றாகப் புரிகிறது. பிறர் கடிதத்தைப் படிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு இல்லை என்றுதான் சொன்னேனே யொழிய என்னைப் பரம உத்தமமான, தெய்வீக புருஷனாக நான் வர்ணித்துக் கொள்ளவில்லை. நான் சாமானிய மனிதன் தான். பலவித ஆசாபாசங்களும் பலவீனங்களும் உடையவன் தான். அதே சமயம் பிறர் கடிதத்தைப் படிப்பது போன்ற சில கெட்ட பழக்கங்களை அண்ட விடாமல் என்னை நானே காத்துக் கொள்ளும் மனோபலமும் பெற்றவன். கமலா நீயே யோசித்துப் பார். எனக்கு இருக்கிற செல்வத்துக்கு நான் எவ்வளவோ தீய பழக் கங்களுக்கு அடிமையாகிக் கெட்டலையலாம். என்னைக் கேட்பார் இல்லை. ஆனாலும் நான் இந்த ஊரில் நற்பெயர் எடுத்துக் கௌரவமாக வாழவில்லையா? என்னை யாரேனும் வெறுக்கும்படியோ இழித்துரைக்கும்படியோ நடந்து கொண்டிருக்கிறேனா? சொல்!"
கமலாவுக்கு அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தபோது ஆங்காரத்துடன் அவரைக் கிண்டல் பண்ணுவது போலத் தான் பேசியது தவறு என்று உணர்ந்து வருந்தினாள். ரங்கநாதனிடம் கெட்ட பழக்கங்கள் ஏதும் கிடையாது என்பதுடன் பரோபகாரி என்றும் ஊரில் நற்பெயர் எடுத்திருந்தார். 'லக்ஷ்மிகடாச்சத்தைப் பெற்றவர், செல்வம் ஈட்டும் ஆற்றலை உடையவர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பது அநியாயமல்லவா? தமது சொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசையால் அவர் என்னை மணந்துகொள்ள விரும்பியதில் என்ன தவறு? அவர் இஷ்டத்துக்குப் பணியுமாறு அவர் என்னையோ அல்லது அப்பா-அம்மாவையோ வற்புறுத்தவில்லையே? இவர்கள்தாமே அந்தச் சம்பத்துக்களை யெல்லாம் பார்த்து மலைத்துப் போய்ப் பேராசைப்பட்டு இராப் பகலாக அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்?'
அவளுடைய மனம் இளகியுள்ளதைப் படித்துவிட்டவராக அவர் தொடர்ந்தார். "உன் பெற்றோரை நான் என் பங்களாவுக்கு வரச் சொல்லி என் ஐசுவரியத்தைக் காட்டியது கூடத் தவறோ என்று