(Reading time: 7 - 13 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 34 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 34 -- திருமண அழைப்பிதழ்

  

வாசலில் விளக்கு ஏற்றிவிட்டு வந்த கமலா வெகு உற்சாகமாகச் சமையல் காரியங்களில் ஈடுபட்டாள். அடுப்பு மூட்டத் தான் கடைசியாக எழுதிய கடிதத்தையும் அதற்கு முன்பாக அரைகுறையாக எழுதிக் கிழித்துப் போட்ட கடிதங்களையும் பயன்படுத்திக் கொண்டாள்.

  

புகையில் கண்ணைக் கரித்தபோது 'சனியன்' என்று வையவில்லை. 'பெண்ணாய்ப் பிறந்தேனே' என்று அலுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, 'இன்னும் கொஞ்ச நாட்கள்தான் அடுப்பு ஊதுகிற வாழ்க்கை' என்று எண்ணிக் கொண்டாள். ரங்கநாதமுதலியார் பங்களாவில் பட்டுப் புடவை சரசரக்க இடுப்பில் சாவிக் கொத்து கலகலக்கத் தான் வளைய வருவதைக் கற்பனை செய்து கொண்டாள். சாதம் வெந்து இறங்குவதற்குள் கமலா மெட்ரிக் எழுதித் தேறிவிட்டாள். சாம்பார் கொதி வந்து இறங்குவதற்கு முன் அவள் பட்டணத்தில் ஜாகை வைத்துக் கல்லூரியில் சேர்ந்து எஃப். ஏ. படித்து முடித்தாகிவிட்டது. தயிர் கடைந்து முடிப்பதற்குள் அவள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டமும் பெற்று விட்டாள். அப்பா, அம்மா, விசுவுக்குச் சாப்பிடத் தயாராகத் தட்டு போட்டு தண்ணீர் எடுத்து வைப்ப தற்குள் மேநாடுகளுக்குப் போய் எம். டி. பட்டமும் பெற்றுத் திரும்பி விட்டாள். கடைசியாக அப்பளாம் சுட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்காக ராமப்பட்டணத்தில் பெரிய ஆஸ்பத்திரி உருவாகிவிட்டது! அதில் அவள் மிடுக்குக் குறையாத பரிவுடன் வளைய வந்து நற்பணியாற்றும் நேர்த்தியைக் கண்டு பவானி பிரமித்துப் போனாள். கல்யாணம் ஆனந்தக் கண்ணீர் தளும்ப நின்றான்.

  

குமட்டித் தணலில் கையைச் சுட்டுவிட்டது. கமலா உதறிக் கொண்டே நிமிர்ந்தபோது வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கருகிய அப்பளம் காமாட்சி அம்மாள் கண்ணில் படாதவாறு அடுப்புக்குப் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு, சூடு பட்ட விரலை உதடுகளுக்கிடையில் வைத்துச் சப்பிக் கொண்டே ஓட்டமும் நடையுமாகச் சென்று கதவைத் திறந்தாள்.

  

விசுப் பயல் புதுச் சட்டை, டிராயர் அணிந்த கோலத்தில் முதலில் உள்ளே நுழைந்தான். "என்னடா, இது, ஜவுளிக் கடையிலேயே டிரஸ் பண்ணிக் கொண்டாயா?" என்று கமலா புன்னகையுடன் கேட்டாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.