Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 35 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 35 -- இருள் நிலவாகுமா?
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் தமது பங்களா வாசல் போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே வந்தார். டென்னிஸ் டிரெஸ்ஸில் இருந்தவர் நேராக மாடியில் தமது படுக்கை அறைக்குப் போய் அவற்றைக் களைந்துவிட்டு ஹவுஸ் கோட் ஒன்றை அணிந்து இடுப்பில் நாடாவை முடிந்தபடியே மீண்டும் கீழே இறங்கி வந்தார். வரவேற்பு அறையில் இருந்த அலங்காரமான அலமாரி யொன்றைத் திறந்தார். உள்ளே நோட்டம் விட்டு விட்டு, "மணி! மணி!" என்று உரக்க அழைத்தார்.
"ஸார்! வந்துட்டேன்" என்று பதில் கொடுத்தபடியே சமையலறையிலிருந்து வந்த மணி, தோளிலிருந்து தொங்கிய அழுக்குத் துண்டில் கையைத் துடைத்தபடி நின்றார்.
"சோடா இருக்கான்னு பார்த்து வாங்கிக் கொண்டு வந்து வைக்கப்படாது? தினமும் அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா நான்?"
"சோடாதானே? ரெடியா இருக்கே? மார்க்கெட்டுக்குப் போய் வாங்கி வந்த சாமான்களோடு அடுப்பங்கரையிலேயே வைச்சுட்டேன். சமையலுக்கு நேரமாகி விடவே அதில் கவனம் போய்விட்டது."
"சரி, சரி! சீக்கிரம் கொண்டுவந்து இங்கே அடுக்கு. ஒவ்வொரு தடவையும் நான் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார வியாபாரி மாதிரி சோடா சோடான்னு அலற வேண்டியிருக்கு!"
மணி சமையலறைக்குச் சென்று ஒரு பெரிய துணிப் பையுடன் திரும்பினார். அதிலிருந்து ஸ்பென்ஸர் சோடாக்களை எடுத்து அலமாரியில் வரிசையாக அடுக்கினார். கூடவே, "ஸார்! நான் சொல்றேன்னு கோபிக்கப் படாது. நீங்க இங்கே உத்தியோகத்தை ஏற்று வந்தபோதே உங்க அப்பா என்னிடம் சொல்லி அனுப்பினார்...." என்று இழுத்தார்.
"ஷட் அப்!"
"நான் வாயை மூடிக் கொண்டு போய்விட்டால் உங்க அப்பாவுக்குத் துரோகம்