Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 38 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 38 -- படை கிளம்பியது!
இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணம் சமூக சேவா சங்கக் கட்டிட வாசலில் காரை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது அவன் முகம் பேயறைந்த மாதிரி இல்லை; அதைவிட மோசமாக இருந்தது.
"என்ன ஆயிற்று உங்களுக்கு? இன்று ஃபைனல் டிரெஸ் ரிகர்சல் என்று தெரிந்து தாமதமாக வந்தீர்கள். எதையோ பறி கொடுத்துவிட்டது போல் நிற்கிறீர்கள். டயலாக்கை உளறிக் கொட்டுகிறீர்கள்!" என்றாள் பவானி.
"ஆமாம். எனக்கு மனமே சரியில்லை" என்றான் கல்யாணம். "உங்களுக்கெல்லாம் நான் எடுத்திருக்கிற முடிவை எப்படி விவரிக்கிறது; அதை நீங்கள் எந்த விதமாக ஏற்றுக் கொள்ளப் போறீங்க என்பதை எண்ணினால் ஒரே குழப்பமா யிருக்கு."
"போச்சுடா! ஸ்குரூ லூஸா? திருப்புளி கொண்டு வரட்டுமா?"
"பழுதுபார்க்கப்பட வேண்டிய மூளை ரங்கநாதனுடையது" என்றான் கல்யாணம்.
"புரியும்படிதான் சொல்லுங்களேன். சுற்றி வளைப்பானேன்?" என்றாள் பவானி.
"ஆமாம் பவானி, சொல்லத்தான் வேண்டும்! சொல்ல வேண்டிய நேரம் வந்தும் விட்டது. விசுவிடம் ரகசியத்தை வெளியிடுவதில்லை என்று சத்தியம் செய்து தந்தேன். ஆனால் அதைக் காப்பாற்றப் போனால் என் மனச்சாட்சி என்னைச் சும்மா விடாது; வதைத்துவிடும். மாசிலாமணி குடும்பத்தை ரங்கநாதன் வீட்டிலே குடி வைத்ததே நான்தான் என்பதால் எனக்கு இதில் ரொம்பவும் பொறுப்பு உண்டு. நண்பர்களே கேளுங்கள்! பவானி! நீங்களும் கேளுங்கள்!
"ரங்கநாதன் அந்த ஏழைக் குடும்பத்தின் அநாதரவான நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை விலைக்கு வாங்கி விட்டார்! அந்தப் பெண் கமலாவை மணந்து கொள்ளப் போகிறார். அறுபது வயதுக் கிழவனுக்கும் பதினெட்டு வயதுக் குமரிக்கும் திருமணம்!"