Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 39 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 39 -- தந்திரம்!
பவானி வீடு திரும்பும் நோக்கில் காரில் ஏறிப் புறப்பட்டவள், பாதி தூரம் போன உடனேயே மனம் மாறியவளாக ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியார் இல்லத்துக்குச்சென்றாள்.
பவானியைப் பார்த்ததுமே அவர், "வாங்க, வாங்க! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே" என்றார்.
"அழகுதான் நீங்கள் எவ்வளவு பெரிய ஸீனியர் லாயர்! உங்களை நான் கூப்பிட்டுஅனுப்புவதா?"
"வயதால் பெரியவனாக இருந்தால் போதுமா? செல்வாக்கு என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதோடு பெண்மைக்குரிய சலுகைகளும் உங்களுக்கு உண்டு. அதை மதிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது."
"உங்கள் வாதம் இரண்டையும் நான் ஏற்பதற்கில்லை. இந்த ஊரில் உங்களுக்கு இல்லாத செல்வாக்கு நேற்று வந்த எனக்கு என்ன இருக்கிறது?" என்றாள் பவானி. "இரண்டாவது, ஆண்களோடு சரிநிகர் சமானமாகக் கருதப்பட வேண்டும் என்றுதான் என்போன்றவர்கள் ஆசைப்படுவோமே யன்றிப் பெண் என்பதற்காகத் தனிச் சலுகை காண்பிப்பதை விரும்ப மாட்டோம்."
"சரி, உங்கள் விஜயம் அடியேனுக்கு நீங்கள் அளித்த கௌரவமாகவே இருக்கட்டும். என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பி, டீ,ஓவல்டின்...."
உள்ளே செல்லத்தின் குரல் உரக்கக் கேட்டது. "நானும் இரண்டு நாட்களாக முட்டிக் கொண்டிருக்கிறேன். 'காப்பிக் கொட்டை வாங்கணும்' என்று. யாராவது காதில் போட்டுக் கொண்டால்தானே? ஒருத்தர் சட்டப் புத்தகமே சரணாகதின்னு அடைஞ்சு கிடக்கிறார். இன்னொருத்தன் 'நாடகம், நாடகம்' என்று கூத்தடிக்கிறான். இந்த லட்சணத்தில் வரவங்க போறவங்க எல்லோருக்கும் எப்படியாவது நான் காப்பி போட்டுக் கொடுத்தாக வேண்டும்! நான் என்ன மந்திரக்கோல் வைச்சுக்கிட்டிருக்கேனா, இல்லை, குழாயைத் திறந்தால் காப்பியா கொட்டுமா?"