Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 42 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 42 -- "பழிக்குப் பழி!"
"ரங்கநாத முதலியாரா? என்னைத் தேடி வந்திருக்கிறாரா? இதோ வந்து விட்டேன்" என்றாள் பவானி.
மாடியில் அவள் தன் தனி அறையில் உள் பக்கம் கதவைத் தாளிட்டுக் கொண்டு உமாகாந்துடன் உரையாடிக் கொண்டிருந்தாள். ஏன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தாள் என்று கூடச் சொல்லலாம்! அவள் கட்டிலில் குப்புறப் படுத்திருக்க எதிரே தலையணை மீது உமாகாந்தின் படம் நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருசமயம் அவள் பவானியாக இருந்து கோபிப்பாள். உடனே உமாகாந்தாக மாறிச் சமாதானம் கூறுவாள். மீண்டும் பவானியாக மாறி வம்புக்கு இழுப்பாள். அல்லது அந்தரங்கங்களைப் பறிமாறிக் கொள்வாள்.
பவானியாகவும் உமாகாந்தாகவும் மாறிமாறி விளங்கிய நிலை மாறி ஒரே தருணத்தில் அவளே இருவராகவும் இருப்பாள். அப்புறம் நீ, நான் என்ற பேதமின்றி உமாகாந்தின் நினைவில் தன்னை அடியோடு கரைத்துக் கொண்டுவிடுவாள்.
இப்படி அவள் ஏதோ ஓர் இனம் புரியாத இன்ப உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோதுதான் அவள் மாமா குணசேகரன் கதவைத் தட்டி ரங்கநாதமுதலியார் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்.
பவானிக்கு உடனே அவர் எதற்காக வந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. ஏனெனில் அவர் அவள் வீடு தேடி வருவதற்கு முன்பாகவே திருநீர்மலையில் நடந்த கலாட்டா பற்றிய விவரங்கள் எல்லாம் அவளை நாடி வந்து விட்டன. அவளை மட்டுமா? ராமப்பட்டணம் ஊர் முழுவதுமே அதுபற்றித்தான் பேச்சு. எனவே, ரங்கநாத முதலியார் எதற்காக வந்திருக்கிறார் என்பது புரிந்தாலும் அவர் தன்னைத் தேடி வந்தது பவானிக்கு வியப்பாக இருந்தது. 'நியாயமாக அவர் தமது வக்கீல் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனையல்லவா நாடிப் போயிருக்க வேண்டும்? கோபாலகிருஷ்ணனிடம் தான் கூறி எச்சரித்து அனுப்பியது என்னவாயிற்று? ஏன் அவரால் தமது மகனின் போக்கைத் தடுத்து நிறுத்த முடியவில்லை?' இந்தக் கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக மனத்தில் எழ அவள் உமாகாந்தின் படத்தில் அப்போதைக்கு கடைசி முறையாகக் காதல் முத்திரை பதித்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையில்