Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 43 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 43 -- நீதிமன்றம்
கோர்ட்டு வாசலில் பவானியின் பளபளவென்று பாலிஷ் ஏறிய கார் வந்து நின்றது. வக்கீல் உடையிலேயே பவானி இறங்கினாள். அங்கு மிங்குமாக நின்று பேசிக் கொண்டிருந்த கட்சிக்காரர்களும் கோர்ட் சேவகர்களும் விடுவிடுவென்று காரை நோக்கி வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுள் ரங்கநாத முதலியாரின் கணக்குப் பிள்ளையும் ஒருவர். கைப்பெட்டியை ஒருவர், தஸ்தாவேஜுக் கட்டுகளை ஒருவர், சட்டப் புத்தகங்களை ஒருவர் என்று போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டார்கள். பவானி நடக்கத் தொடங்கியபோது கூட்டம் விலகி வழி விட்டது. ஓர் அரசி ராஜ பரிவாரங்களுடன் செல்வது போல் பவானி கம்பீரமாக நடக்க, மற்றவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர்.
"பார்த்தீராங்காணும், அம்மாவுக்கு நடக்கிற உபசாரத்தை?" என்று தாழ்வாரத்தில் நின்ற வக்கீல்களுள் ஒருவர் கூறினார்.
"பிறந்தால் பெண்ணாய்ப் பிறக்க வேண்டும்" என்றார் இன்னொருவர்.
"பெண்ணாய்ப் பிறந்தால் மட்டும் போதுமா? எல்லாப் பெண்களுக்கும் இப்படி குவீன் விக்டோரியா மாதிரி ராஜமரியாதை நடக்கிறதா? பிறந்தால் பவானி என்கிற பெண்ணாய்ப் பிறக்கணும் என்று சொல்லும்" என்றார் மூன்றாமவர்.
"கட்சிக்காரர்கள் எத்தனை பேர் மிட்டாய்க் கடையில் ஈ மொய்ப்பதுபோல் அவளைச் சுற்றி வருகிறார்கள் பார்த்தீரா? வாதி, பிரதிவாதி இரண்டு பேருமே பவானியிடம் கேஸைக் கொடுத்து விடுவார்கள் போலிருக்கு. வயிற்றெரிச்சல்!"
இதற்குள் படியேறித் தாழ்வாரத்தை அடைந்துவிட்ட பவானி, அங்கு நின்று கொண்டிருந்த வக்கீல்களைப் பார்த்து, "குட் மார்னிங்! எல்லாரும் ஏன் வராந்தாவில் நிற்கிறீர்கள்?" என்றாள்.
"நீங்கள் விஜயம் பண்ணுகிற வைபவத்தைப் பார்க்கத்தான் நிற்கிறோம்" என்றார் ஒருவர்.
"தாங்கள் மட்டும்தானா? மாஜிஸ்திரேட் கூடத்தான் வந்து சேம்பர்ஸில் காத்துக்