Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 44 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 44 -- வழக்கு
நீதி மன்றத்தினுள்ளே எல்லோரும் கூடினார்கள்.
"மாஜிஸ்திரேட் வருகிறார்; சைலன்ஸ்!" என்று டபேதார் கத்தினார்.
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கம்பீரமாக வந்து ஆசனத்தில் அமர்ந்தார். பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்து, "கேஸ் எடுத்துக்கொள்ளலாமா?" என்றார்.
"எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்தக் கேஸில் பிரதிவாதிகளுள் ஒருவரான கல்யாணத்தைக் காணோம்."
"என்ன கல்யாணம் வரவில்லையா? கோர்ட் உத்தரவை மீறுவதா? ஆயிரம் ரூபாய் அபராதம்!" என்றார் கோவர்த்தனன். இப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகவே ஆவலுடன் காத்திருந்தவராயிற்றே!
"யுவர் ஆனர்! யுவர் ஆனர்!" என்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தார் கோபாலகிருஷ்ணன். "தாங்கள் தயவு செய்து தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவன் எனக்கு முன்பே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான். ஏன் தாமதம் என்று புரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவான். என் மீதும் கல்யாணத்தின் மீதும் இன்னும் பத்து இளைஞர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லோர் சார்பிலும் நான்தான் ஆஜராகிறேன்.
எனவே கல்யாணம் வருவதற்குத் தாமதமானதைப் பொருட்படுத்தாமல் வழக்கை நடத்தலாம். நான் தயாராக இருக்கிறேன்."
இந்தச் சயயம் கல்யாணம் விடுவிடுவென்று நடந்து வந்து தந்தைக்கு அருகில் அமர்ந்து கொண்டான். அவன் வந்துவிட்டதைக் கவனியாதவர் போல் கோவர்த்தனன் கூறினார். "நீர் தயாராய் இருப்பதால் உமது மகன் செய்யும் தவறு சரியாகி விடாது. 'கன்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்' மிகப் பெரிய குற்றம் என்பது உமக்கா தெரியாது? சரி, தண்டனையைக் கோர்ட் கலையும் வரை 'சஸ் பெண்ட்' பண்ணி வைத்திருக்கிறேன்.
அதற்குள் அவன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம். எதற்கும் இந்த எச்சரிக்கையைச் சொல்லும்;