(Reading time: 6 - 11 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 45 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 45 -- கமலாவின் கல்யாணம்

  

திருநீர்மலையிலிருந்து கிளம்பிய நாளாகக் கல்யாணத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவி்த்தது.சதா சர்வ காலமும் இரவும் பகலும், தூக்கத்திலும் விழிப்பிலும் ஒரு முகம் அவன் மனக்கண் எதிரே தோன்றி அவனை அலைக்கழித்தது. ஒரு வேலையும் செய்யாமல் ஒன்றிலும் ஈடுபடாமல் அந்த ஒரு முகத்தை அகக் கண்ணால் பார்த்துக்கொண்டிருப்பதே காரியமாகக் காலத்தை ஓட்டினான் அவன்.

  

அந்த ஒரு முகம் பவானியின் அறிவொளி வீசும் அழகிய முகமாக இருந்திருந்தால் அவன் அதிசயப்பட்டிருக்கமாட்டான். ஆனால் அந்த முகம் கமலாவின் முகமாக இருந்ததுதான் அவனை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது. அதிலும் வேதனையும் கோபமும் தாபமும் மிக அவனைப் பார்த்து, "சீ! நீயும் ஓர் ஆண்பிள்ளையா?" என்று கேட்டாளே அப்போது அவள் எப்படித் தோற்றமளித்தாளோ அதே பாவத்துடன் கூடிய வதனம்!

  

'கமலாவின் முகம் என்னை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறதென்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னுடைய குற்ற உணர்ச்சியின் பிரதி பலிப்பா? அவளிடம் ஏற்பட்ட கருணையா அல்லது அதற்குப் பெயர்தான் காதலா?

  

'அப்படியானால் பவானியைத் தான் இத்தனை நாட்களாக விரும்புவதாக எண்ணிக் கொண்டிருந்தேனே? அது தவறா? வெறும் மோகம்தானா அது, காதல் என்பது வேறா? கல்யாணம் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான்.

  

இரண்டு தினங்களாக நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வந்தபோதெல்லாம் அவன் இதயத்தில் இதே போராட்டம்தான். மூன்றாவது தினம்--ஸம்மிங் அப் நடந்த அன்று காலை அவனால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கமலாவை அவள் வீட்டில் போய்ப் பார்த்து இரண்டு வார்த்தைகளாவது பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.

  

ஆனால் கமலாவின் பெற்றோர் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமல்ல; 'எதற்கு வந்தாய்?' என்பது போல் கேட்டும் விட்டார் மாசிலாமணி. உள்ளே சமையலறையில் இருந்த கமலாவை அவனால் பார்க்கக் கூட முடியவில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.