Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 46 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 46 -- பவானியின் பதில்
பவானி தனது கட்சியின் வாதங்களைக் கோவையாக எடுத்துரைத்து, "இங்குள்ள இத்தனை இளைஞர்கள் சட்டவிரோதமாகக் கமலாவின் திரு மணத்தை நிறுத்துவதில் அத்தனை தீவிரம் காட்டினார்களே, அவர்களில் யாரேனும் இந்த ஏழைப் பெண்ணை மணக்க முன் வருவாரா? அப்போது சுயநலம்தான் முன் நிற்கும்; பணம் பதவி சொத்து அந்தஸ்து எல்லாம் குறுக்கிடும்" என்று குத்தலாகப் பேசிய போது கல்யாணத்தின் உள்ளத்தில் ஓர் உண்மை பளிச்சிட்டது.
கமலாவின் திருமணத்தைத் தான் நிறுத்தியது அவள் பேரிலுள்ள கருணையினால் மட்டுமல்ல. அவனைத் தவிர வேறு யாரும் அவளை அடைவதைத் தன்னால் சகித்துக் கொள்ள முடியாததாலும்தான்! இதை அவன் மனம் புரிந்து கொண்ட மறு வினாடி அவன் ஏதோ கூற எழுந்து நின்றான். தகப்பனார் கோபால கிருஷ்ணன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்து விட்டார்.
ஆனால் பவானி விடவில்லை. "மிஸ்டர். கல்யாணசுந்தரம்! ஏன் எழுந்து நின்று விட்டுச் சும்மா உட்காருகிறீர்? கோர்ட்டாரிடம் ஏதாவது கூற விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம். நீரும் பிரம்மச்சாரிதானே? கமலாவின் கல்யாணத்தைத் தடுக்க முன் வந்தீரே? இப்போது கமலாவின் கல்யாணமாவதற்கும் முன் வருவீரா?" என்றாள்.
கல்யாணசுந்தரம் தகப்பனார் சட்டையைப் பிடித்து இழுப்பதைப் பொருட்படுத்தாமல் மறுபடியும் எழுந்து நின்றான். "பேஷாக முன் வருவேன். முன் வைத்த காலைப் பின் வைக்கும் வழக்கம் எனக்கு இல்லை. கமலா சம்மதித்தால் அவளை மணந்து கொள்ள நான் தயார்" என்றான்.
கோர்ட்டில் ஒரே ஆரவாரம், கரகோஷம், "ஹியர்! ஹியர்!" என்ற ஆமோதிப்பு; ஹிப் ஹிப் ஹுரே!" என்று இளைஞர்களின் கூப்பாடு!
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மணி அடித்தார். கோர்ட் சேவகன், "ஸைலன்ஸ்! ஸைலன்ஸ்!" என்று தொண்டை கிழியக் கத்தினான்.
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் எழுந்து, "யுவர் ஆனர்! இப்போது கல்யாணம் சொன்னதைத்