(Reading time: 8 - 15 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 47 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

   

அத்தியாயம் 47 -- அவமானத்தின் எதிரொலி

  

ஹோம்ரூல் கோபால கிருஷ்ணனுக்கும் கல்யாணத்துக்கும் வீட்டிலே மண்டகப்படி நடந்தது.

  

"பேர்தான் ஊரெல்லாம் அமர்களப்படுகிறது. 'வக்கீல் திலகம்' 'குறுக்கு விசாரணை மன்னன்' என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். ஆனால் தனக்கென்று வரும்போது ஒரு சின்னக் கேஸை ஜெயிக்கத் தெரியலையே" என்றாள் செல்லம், தன் கணவரைப் பார்த்து. "கேவலம் ஒரு பெண்பிள்ளையிடம் தோற்றுவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள்!"

  

"இது அப்பாவுக்குத் தோல்வி இல்லை, அம்மா" என்றான் கல்யாணம். "மாசிலாமணி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு விட்டார். ஒரு விதத்தில் அப்பாவுக்கு இது வெற்றி என்றே வைத்துக் கொள்ளலாம்.."

  

"போதுண்டா, சமர்த்து வழியறது" என்றாள் செல்லம். "அதுதான் அந்தப் பெண்ணை நீயே கல்யாணம் செய்து கொள்கிற‌ரதாகக் கோர்ட்டில் சத்தியம் பண்ணிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறாயே. வாக்குறுதியை வாங்கிக் கொண்ட பிறகுதானே அவர்கள் ராஜியாகப் போகச் சம்மதித்த்தார்கள். இதற்குப் பெயர் வெற்றியா? வெட்கக்கேடு!"

  

"ஏன் அப்படி வெறுத்துக் கொள்கிறாய் அம்மா? நீதானே வீட்டுக்குப் பதவிசாக, அடக்கமாக ஒரு நாடுப் பெண் வர வேண்டும் என்று ஆசைப் பட்டுக் கொண்டிருந்தாய்? பவானி பற்றி நானோ அப்பாவோ பிரஸ்தாபித்த போதெல்லாம் பயந்து போய் 'வேண்டாம், வேண்டாம்' என்று பதறினாயே. இப்போ உன் ஆசைப்படி அடக்கமான பெண்ணை மணந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறேன்."

  

செல்லம், " கஷ்டம், கஷ்டம்" என்று நெற்றியில் தட்டிக் கொண்டாள். "குடும்பப் பாங்கான பெண் வேண்டும் என்று நான் சொன்னது வாஸ்த‌வம். அதற்காக இரண்டாந்தரச் சரக்கையா ஏற்பேன்? அவள் எவனுக்கோ கழுத்தை நீட்டிவிட்டு வந்தவள், இந்த வீட்டில் அடியெடுத்து வைப்பதா? அவள் ஜாதகத்தில் என்ன தோஷமோ, சரியாக முகூர்த்த சமயத்தில் கல்யாணம் நின்று போச்சு. அவளைப் போய் இங்கே குடியேற்றுவதா?"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.