கல்யாணம் திகைத்துப் போனான். தன் தாயார் திடும்மென்று இப்படி ஒரு புதிய நோக்கில் கமலாவைப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே யில்லை. 'கமலாவின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தால் அது கல்யாணமாகிய தான்தான்' என்று தன் தாயாருக்கு எப்படி எடுத்துக் கூறிப் புரிய வைப்பது? தோஷம், கல்யாணத்தின் வடிவிலே தோன்றித்தானே திருமணத்தை நிறுத்தியது?
"கேட்டியாடா?" என்றார் கோபாலகிருஷ்ணன். "இதையெல்லாம் யோசித்துத்தான் நான் கோர்ட்டிலேயே உன் சட்டையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்கப் பார்த்தேன். நீ என்னடாவென்றால் வீராதி வீரனாக உன்னைக் காட்டிக் கொள்ள என்னவெல்லாமோ உளறி வைத்தாய்."
"நான் ஒன்றும் உளறவில்லை, அப்பா!நன்றாக யோசித்து, இதுதான் சரியானமுடிவு என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். உங்களுக்காகவோ அல்லது அம்மாவுக்காகவோ நான் இனி மாறப் போவதில்லை. உங்களுக்குக் கமலாவைப் பிடிக்கவில்லையென்றால் நான் தனிக் குடித்தனம் வைத்துக் கொள்ளத் தயார்." என்று உறுதியாகக் கூறிய கல்யாணம், கோபம் கலந்த வேகத்தோடு சட்டையை மாட்டிக் கொண்டு விடுவிடென்று புறப்பட்டான். நாடகத்துக்கு மாற்றுத் தேதி நிர்ணயித்துச் சமூக சேவா சங்கத்தில் மறுபடியும் ஒத்திகைகள் ஆரம்பமாகி யிருந்தன.
"ஐயோ! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டுப் போறானே! நீங்களும் கேட்டுண்டு சும்மா இருக்கிறீர்களே!" என்று புலம்பினாள் செல்லம். கோபாலகிருஷ்ணன், வீட்டு யுத்தம் எப்படியாவது போகட்டும்; உலக யுத்தத்தைக் கவனிப்போம் என்று எண்ணியவராக அன்றைய நாளிதழில் ஆழ்ந்தார். - - - - - -
மாசிலாமணி முதலியார் வீட்டில் காமாட்சி அம்மாள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்: "வீடாவது, வீடு! அரண்மனை மாதிரி இருந்ததே! மூன்று அலமாரிகள் நிறைய வெள்ளிச் சாமான். ஒரே ஒரு வெள்ளிக் கூஜாவைத் தூக்கிப் பார்த்தேன்; கனமாவது கனம்! இந்தக் கையாலேயே இரும்பு அலமாரி பூட்டி இருக்கிறதா என்று அழுத்திப் பார்த்து விட்டு வந்தேனே! எல்லாம் போச்சு. அதை யெல்லாம் ஆள இந்தத் துக்கிரிப் பெண்ணுக்குக் கொடுத்து