வைக்கவில்லை."
"அதைப் பற்றி இப்போ பேசி என்ன செய்ய? எல்லாமே நன்மைக்குத்தான் என்று வைத்துக் கொள். மாப்பிள்ளை என்று பார்த்தாள் கல்யாணசுந்தரம் எவ்வளவோ உசத்தி. இளம் வயசு, நல்ல படிப்பு, பார்க்கவும் இலட்சணமாய் இருக்கிறான். பணம் காசு, சொத்து சுதந்திரம் எதற்கும் குறைவில்லை: ஒரே பையன்.... "
"இத்தனை இருந்தும் என்ன புண்ணியம்? அம்மா கோண்டுவாக அல்லவா இருப்பான் போலிருக்கிறது? புருஷப் பிள்ளைகளுக்குச் சுயபுத்தி வேண்டாமோ?
"சுய புத்தி இல்லாமலா அவ்வளவு பேர் நடுவில் கோர்ட்டில் 'நான் கமலாவைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்;" என்றான்.
"அவன் சமர்த்தை நீங்கள்தான் மெச்சிக் கொள்ள வேண்டும். நாளைக்கு அவனே வந்து நின்று 'எங்கம்மா இந்தக் கல்யாணம் வேண்டாமென்கிறாள், நான் என்ன பண்ணறது?" என்று கையை விரித்தாலும் விரிப்பான்.
அப்போது ரங்கநாதனின் நகைப் பெட்டி யொன்றை எடுத்து வந்து தகப்பனாரிடம் நீட்டி "இதைக் கொண்டுபோய் கொடுத்து விடுங்கள், அப்பா!" என்றாள் கமலா.
காமாட்சி அம்மாள் சரேலென்று இடையில் பாய்ந்து அதைப் பிடுங்கிக் கொண்டாள். "இப்போ ஒண்ணும் அவசரமில்லை; எங்கே ஓடிப் போறது? பார்த்துக் கொள்ளலாம்." என்றாள். "மூதேவிக்கு அதிர்ஷ்டம் வந்தால் மூன்று நாளைக்கு நிலைக்கும் என்பார்கள். உனக்கு ஒரு நாள்கூட நிக்கலையே."
"அப்பா! வெறுமனே அம்மா என்னை வையறாளே? நான் என்ன தப்பு செய்தேன்?" என்று விசும்பினாள் கமலா.
"முகூர்த்த வேளை பார்த்துக் கண்ணால் ஜலம் விட்டுக் கொண்டு நின்றாயே, அது போதாதா?" என்றாள் காமாட்சி.