Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 51 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 51 அடிபடாத மான்!
கமலாவின் வீட்டைப் பவானியின் கார் நெருங்க நெருங்க உள்ளே அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மனத்தால் நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந்தார்கள். ஒருவர் மனம் மற்றொருவருக்கு ஒளிவு மறைவு ஏதுமின்றிப் புலனாகி விட்டதால் ஏற்பட்ட புதியதொரு பந்த பாசத்துடன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"சீக்கிரமே உமாகாந்த் சுகமடைந்து உங்கள் இருவரையும் மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது அக்கா!" என்றாள் கமலா.
"அது சுலப சாத்தியமாகத் தோன்றவில்லையே?" என்று பவானி சொன்னபோது குரலில் ஏக்கத்தை விடக் கவலை அதிகமாகத் தொனித்தது. "ஸி.ஐ.டி.கள் இருவர் இவரைத் தேடிக் கொண்டே இருக்கும்போது ஊரறிய எப்படித் திருமணம் நடக்கமுடியும்?"
"அப்படியானால் ரகசியமாக ஒரு கோயிலில் விவாகம் பண்ணிக் கொள்ளுங்கள்! சுவாமி சந்நிதி முன் மாலை மாற்றிக் கொள்ளுங்கள். சாட்சிக்கு என்னை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். நாத்தனார் ஸ்தானத்திலிருந்து மூன்றாவது முடிச்சை நான் அழுத்தமாகப் போடுகிறேன்!"
"ரகசியமாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடலாம். ஆனால் ரகசியமாக இல்வாழ்க்கை எத்தனை காலம் நடத்த முடியும்? வீட்டிலேயே சதா ஒளிந்திருந்து உமா காந்த் என் சம்பாத்தியத்தில் வாழ விரும்புவாரா என்பது தெரிய வேண்டும்."
"அப்படியானால் நம் இருவருக்கு மிடையில் கல்யாண விஷயத்தில் ரொம்ப ஒற்றுமை அக்கா. இருவருக்குமே திருமணம் நடக்கவே போகிறதில்லை!"
"ஏன் கமலா அப்படிச் சொல்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு? கல்யாணம் உன்னை மணப்பதாகக் கோர்ட்டிலேயே உறுதி கூறினாரே!"
"அவர் தயாராக இருக்கலாம். அவர் தாயார் குறுக்கே நிற்கிறாரே! ஊரார் இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அந்த அம்மாள் எங்கள் வீட்டுக்கு வந்து