Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 53 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 53 -- கொடூரப் புன்னகை
நடிப்புக் கலை சிரமமானதாக நாடக ஒத்திகைகளின் போது தோன்றவே இல்லை. சமூக சேவா சங்க அங்கத்தினர்கள் பலரும் பார்த்துப் பிரமிக்கும்படி அவள் வெகு இயல்பாகத் தான் ஏற்ற பாத்திரத்துக்கு உயிர் கொடுத்து நடித்தாள். ஆனால் இப்போது மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் கூறுவது ஒன்றுமே தனக்குப் புரியாததுபோல் நடிக்க நேர்ந்த போதுதான் அந்தக் கலை உண்டமையில் எவ்வளவு சிரமமான ஒன்று என்பதை அவள் உணர்ந்தாள். "நீங்கள் எங்கே, எப்போது வேட்டைக்குப் போனீர்கள்? அதிலும் ஒரு புலியைச் சுடும் அதிர்ஷ்டம் உங்களுக்கு எப்படி அடித்தது? ஏலமலைக் காட்டில் அதிகபட்சம் நரி அல்லது ஓநாய் போன்ற துஷ்ட மிருகங்கள்தாம் உண்டு என்று சொல்வார்களே?" என்றாள்.
"இது இரண்டு கால் புலி" என்றார் மாஜிஸ்திரேட், அவளைக் கூர்ந்து நோக்கியவாறு. "நாலு கால் புலியைவிடப் பயங்கரமானது! கதர்ச் சட்டை போட்டுக்கொண்டு சாது போல் ஊரை ஏமாற்றும்!"
பவானி தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?" என்றாள்.
"புரிய வைக்கிறேன், பவானி! இப்படி உட்கார்" என்று கூறி, கோவர்த்தனன் சோபா ஒன்றில் அமர்ந்து பவானியை அருகில் உட்காருமாறு ஜாடை காட்டினார்.
"எனக்கு இப்போ நேரமில்லையே? ஹைகோர்ட்டுக்குப் போக வேண்டிய ஒரு வழக்கை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்ற பவானி அவர் காட்டிய இடத்தில் அமராமல் எதிரே ஒற்றை சோபாவில் அமர்ந்தாள்.
"பாதகமில்லை. இதுவும் ரொம்ப முக்கியமான விஷயம்தான். ரொம்ப நேரம் உன்னைத் தாமதப்படுத்த மாட்டேன், சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்...பவானி! இது நாள் வரை நான் உன்னிடம் கூறத் தயங்கிக் கொண்டிருந்த விஷயங்களை இப்போது செல்லியே தீரவேண்டியிருக்கிறது. இனியும் தாமதிப்பதற்கில்லை. என்னைப் பற்றி இதுவரை உன்னிடம் ஒரு விவரமும் நான் சொன்னதில்லை அல்லவா? இப்போது கூறுகிறேன், கேள்! நானும்