Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 54 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 54 -- "பவானியின் காதலன்"
இரண்டு நாட்கள் கழித்துக் கல்யாணசுந்தரம் மறுபடியும் கமலாவின் வீட்டுக்குப் போனான். கமலாவும் விசுவும் மட்டும் இருந்தார்கள். 'நல்ல வேளையாகப் போயிற்று, கமலாவுடன் சற்று மனம் விட்டுப் பேசலாம்' என்று அவன் சந்தோஷப்பட்டது தப்பாகப் போயிற்று. கமலா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. முகம் காட்டாமல் தலை குனிந்து கொண்டோ அல்லது வெட்கப்பட்டுக் கதவுக்குப் பின் மறைந்திருந்தோ பேசினாளா என்றால் அதுவும் கிடையாது.
"அப்பாவும் அம்மாவும் கோவிலுக்குப் போயிருக்காங்களாக்கும்?" என்றான் கல்யாணம். பதில் இல்லை. "திரும்புவதற்கு நேரமாகுமோ?" என்றான். அதற்கும் பதில் இல்லை. "இப்பத்தான் போனார்களா? அல்லது கிளம்பி ரொம்ப நேரமாச்சா?" என்று மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டுப் பார்த்தான்.
"என்னவோ கேட்கிறாரே, பதில் சொல்லேண்டா" என்றாள் கமலா விசுவைப் பார்த்து.
"ஓ! பேச வருகிறதே! திடீரென்று ஊமையாகி விட்டாளாக்கும் உன் அக்கா என்று நினைத்தேன்!"
"ஊமையாவது, ஒண்ணாவது! கல்யாணம் மாமா! இன்னைக்குக் காலையிலே அக்கா மறுபடியும் சுத்தியைக் கையில் போட்டுக் கொண்டபோது கொடுத்த சாபங்களையும் வசவுகளையும் கேட்காமல் போயிட்டேளே! மிஷின்கன்லேருந்து குண்டுகள் பறக்கிற மாதிரி சடசடவென்று பொழிந்து தள்ளினா! அம்மாவே அசந்து போயிட்டாள்னா பார்த்துக் கொள்ளுங்களேன்!"
கல்யாணம், விசு பேசி முடிக்கும் வரை காத்திராமல், பதறி, பாய்ந்து, கமலாவின் அருகே சென்று அவள் கையைப் பிடித்துப் பார்த்து, "எங்கே காயம்? எங்கே? எங்கே?" என்று கேட்டான்.
"போதும் உங்கள் கரிசனம்" என்று கமலாகையை உதறினாள். "காயம் கையில் ஒன்றுமில்லை, நெஞ்சில்!"
"ஐயய்யோ! நெஞ்சில் எப்படி அடிபட்டது?"