"உங்களாலேதான். மனத்தில் இருப்பதை முன்னாலேயே சொல்லி யிருந்தால் இப்படி ஊர் சிரிக்கும்படி யாகியிருக்குமா?"
"ஊராரெல்லாம் எதற்குச் சிரிக்கிறார்கள்?"
"விசுவைக் கேளுங்கள்!"
"என்னடா பயலே அக்காவிடம் என்னடா உளறிக் கொட்டினாய்?"
"நான் ஒன்றும் உளரவில்லை; உண்மையைத்தான் சொன்னேன், மாமா! பள்ளிக் கூடப் பசங்கள் உங்களைத் தூரத்தில் பார்க்கிறபோதே, 'கமலாவின் கல்யாணம்' என்று கூறிச் சிரிக்கிறாங்க. அதைச் சொன்னேன். இவளுக்கு அது அவமானமாய் இருக்காம்!"
"இதிலே என்ன அவமானம்? பசங்கள் பேசறதிலேதான் என்ன தப்பு? நான் கமலாவின் கல்யாணம்தான்!"
"நீங்கள் முதலிலேயே உங்கள் மனத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பேசியிருந்தால் இவ்வளவும் நடந்திருக்காதல்லவா? ஒன்றிலிருந்து ஒன்றாக எவ்வளவு தப்பபிப்பிராயங்கள், எவ்வளவு வேண்டாத நிகழ்ச்சிகள் எத்தனை ஏச்சுப்பேச்சுக்கள் கோபதாபங்கள்?"
"நீயும்தான் அவசரப்பட்டு அசட்டுக் காரியம் செய்தாய்! அந்தக் கிழவரைக் கல்யாணம் செய்து கொள்ள ஏன் சம்மதித்தாய்?"
"நீங்கள் அந்தப் பவானியின் மோக வலையிலே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தீர்கள். என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டீர்கள் என்று நினைத்தேன்."
"இதோ பார், கமலா! நீ என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் மிஸ் பவானியைப் பற்றி மட்டும் தப்பாக எதுவும் பேசாதே!"