"அடேயப்பா! பவானி என்கிற பெயரைச் சொல்வதற்குள்ளே இத்தனை கோபம் பொத்துக் கொண்டு வருகிறதே! நான் அப்படி என்ன தகாத வார்த்தை சொல்லிட்டேன்?"
"இன்னும் என்ன கூற வேண்டும்? மோகவலை வீசினாள், மயக்கு மொழி பேசினாள் என்றெல்லாம் ஊரிலே இருக்கிற காலிப் பசங்கள் தான் ஏதோ உளறுகிறார்கள் என்றால் அத்தகைய சொற்களை நீயும் பயன்படுத்தலாமா? என் மனத்தையே நான் சரியாகப் புரிந்து கொள்ளாதது என் தவறு. அதற்காகப் பவானியின் நடத்தைக்குக் களங்கம் கற்பிப்பது போல் எதுவும் சொல்லக் கூடாது! அது மகாபாவம்! அவளைப் போல் ஒண்டர்ஃபுல் லேடியை நான் பார்த்ததே இல்லை! என்ன படிப்பு. என்ன அறிவு! அவ்வளவு ஞானம் இருந்தும் எத்தனை அடக்கம்! எவ்வளவு இனிய சுபாவம்!"
"ஒரேயடியாக வர்ணிக்கிறீர்களே!"
"உண்மையைத்தான் கூறுகிறேன். உன்னைப் பற்றிப் பவானி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறாள் தெரியுமா? நீ இப்படிச் சொன்னாய் என்று தெரிந்தால் எவ்வளவு வருத்தப் படுவாள்!"
"அடடா! நான் அக்காவைப் பற்றி என்ன தகாத விஷயமாகக் கூறிவிட்டேன் என்று இப்படிப் பதறுகிறீர்கள்? உங்களைப் பற்றித்தானே நான் சொன்னேன்? நீங்கள் பவானியிடம் மோகம் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவரிடம் மோகம் கொண்டிருக்கலாம்...."
வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே, 'ஐயோ! தவறு செய்து விட்டோமே; பவானி அக்காவுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டோமே!' என்று கமலாவுக்குத் தோன்றியது. அதே கணத்தில் சுளீரென்று அவள் கன்னத்தில் வலி தெரிந்தது!
வலியை உணர்ந்து கண்களில் கண்ணீரும் பீறிட்ட பிறகுதான் வலியின் காரணத்தை உணர்ந்தாள் கமலா. 'கல்யாணம் தன்னைக்கை நீட்டி அடித்திருக்கிறான்!' விண் விண் என்று இன்னமும் வேதனை தரும் அளவுக்குப் பலமாக விழுந்த அறை!
'தம்பி விசுவுக்கு எதிரே இப்படி அவமானப்படுத்துமளவுக்கு நாம் என்ன அப்படிப் பெரிய தவறு செய்துவிட்டோம்? உண்மை பேசியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' கமலா பிரமித்து