கல்யாணத்துக்குச் சிரிப்பு வந்து விட்டது.
"நான்.... நீ...... எனக்கு.....உனக்கு! என்ன ரகசியம் பொதிந்து கிடக்கிறது இதற்குள்ளே?"
"அப்பாவும் அம்மாவும் என்... சொந்தப் பெற்றோர்கள் இல்லை.... அநாதையான என்னை எடுத்து வளர்த்தார்கள். எனக்கே இந்த விவரம் சமீபத்தில்தான் தெரியும்.
"ஓ! இவ்வளவுதானே!" என்றான் கல்யாணம். "இதை நானும் பவானியும் என் றைக்கோ ஊகித்துவிட்டோம். அவர்கள் உன்னை நடத்தும் விதத்திலிருந்து இதைத் தெரிந்து கொண்டு பல தடவை எங்களுக் குள் பேசிக் கொண்டிருக்கிறோம்."
"இதை அறிந்தால் நீங்கள் என்னை வெறுத்துவிடுவீர்களோ என்றுதான் பயந்தேன். 'யாருக்குப் பிறந்தவளோ, என்ன ஜாதியோ?' என்று அருவருப்படைவீர்களே என்று ஒரே கவலை."
"சேச்சே! அப்படியெல்லாம் எண்ணுகிறவனாயிருந்தால் சமூக சேவா சங்கம் என்று எதற்காக நடத்துகிறேன்? சீர்திருத்த நாடகம் ஏன் போடப் போகிறேன்? அசடே! அதையெல்லாம் நினைத்து நீ இனியும் கவலைப் பட்டுக் கொண்டிராதே! எங்கே, சிரி பார்க்கலாம்?" கல்யாணம் கமலாவின் முகவாயைப் பற்றினான். அவள் நாணிக் கோணித் தன் முகத்தை எங்கே புதைத்துக் கொள்வது என்று புரியாமல் 'களுக்' கென்று சிரித்தபடி அவன் நெஞ்சிலேயே சாய்ந்தாள்.
"ஆல் இஸ் வெல், தட் எண்ட்ஸ் வெல்!" என்று விசு தன் ஆங்கிலப் பாடம் ஒன்றின் கடைசி வரியைக் கூறிய போதுதான் அவன் அங்கிருப்பது அவர்கள் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டு விலகிக் கொண்டார்கள்!
----------------
தொடரும்...