"நான் இங்கே தொடர்ந்து இருப்பதுதான் அசட்டுத்தனம்" என்றான் உமாகாந்த். "உங்களை ஆபத்துக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. என்னை ஸி.ஐ.டி.கள் பின் தொடர்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் அளிப்பது தவறு என்பது எனக்குத் தெரியும்.
"சட்டத்தின் உடும்புப் பிடியிலிருந்து ஒருவனை எப்படி மீட்பது என்று பவானிக்குத் தெரியும்" என்றார் குணசேகரன். உமாகாந்த் இதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். பவானி அந்தச் சிரிப்பில் மகிழ்ந்து புன்னகை புரிந்தாள். பால் நிலவின் வெண் முத்துக்கள் பிரகாசித்தன.
"குணசேகரன் ஸார்! உங்கள் மருமகளின் ஆற்றலை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணாதீர்கள். ஆனால் என்னைக் காப்பாற்ற பவானியின் சட்ட ஞானம்கூடப் போதாது. அவளை ஓர் இக்கட்டான நிலையில் வைக்க நான் விரும்பவில்லை. எனக்கு நீங்கள் உதவியதற்கெல்லாம் நன்றி கூறிவிட்டு என் வழியே போக வேண்டியவன்தான் நான். ஆனால் அதற்கு முன்பாக என்னைப் பற்றிப் பவானி மனத்தில் ஏதும் தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நீக்கிவிட மட்டும் விரும்புகிறேன்.
"ஆமாம், தப்பபிப்பிராயம் ஏற்பட்டுத்தான் இருக்கிறது" என்றாள் பவானி. "தண்டனைக் காலம் முடியும் முன்னர் உங்களை யார் தப்பித்துக் கொண்டு வரச் சொன்னது? இன்னும் இரண்டு வருஷங்கள் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாதா? ஆக்கப் பொறுத்தவருக்கு ஆறப் பொறுக்கவில்லையே? சிறை புகத் தயங்காத தேச பக்தத் தியாகிக்கு முழுத் தண்டனைக் காலத்தையும் அனுபவிக்கும் நெஞ்சுரம் வேண்டாமா?"
"தேச பக்தனாகச் சிறை சென்றிருந்தால் அந்த நெஞ்சுரம் எனக்கு நிச்சயம் இருந்திருக்கும் பவானி!"
"அப்படியானால் உங்கள் தகப்பனார் என்னிடம் கூறியதெல்லாம் பொய்தானா?" திகைப்பும் வியப்புமாகக் கேட்டாள் பவானி.
"பவானி! நான் பாங்கில் கொள்ளை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பெற்றுச் சிறை சென்றேன்.