இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக உமாகாந்தனுக்கும் தகப்பனார் கருணாகரனுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஒன்று நிகழ்ந்தது. அதைக் கேட்டுக் கொண்டே இருந்த கோவர்த்தனன், தான் மார்வாரியின் இரும்புப் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழி புலப்பட்டு விட்டது என்று எண்ணினான். தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையில் நடந்த சொற்போரைக் காது கொடுத்துக் கேட்டான்.
காயம் பட்ட தேசத் தொண்டர்களின் உதவி நிதிக்காகத் தன் தகப்பனாரிடம் கணிசமான தொகையை நன்கொடையாகக் கேட்டான் உமாகாந்தன்.
கருணாகரனோ, "ஊரில் இருக்கிற நன்றி கெட்ட நாய்க்கெல்லாம் சிகிச்சை பண்ண இங்கே என்ன பணம் கொட்டி வைத்திருக்கிறதா?" என்றார்.
"அப்பா! நீங்கள் தேசபக்தர்களை அவமரியாதையாகப் பேசியதை மறந்து விடுகிறேன், பணம் கொடுத்தால்!" என்று உமா காந்தன் பல்லைக் கடித்துக் கொண்டு பேசினான்.
"பணத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்" என்றார் கருணாகரன்.
"அதை நீங்கள் சுலபமாகச் செய்யலாமே? மகாலக்ஷ்மி பாங்கின் பிராஞ்சு மானேஜர் தானே நீங்கள்!" என்றான் உமா.
தகப்பனாருக்குப் பொல்லாத கோபம் வந்து விட்டது. "அடப் பாவி! என்னைப் பார்த்தா அப்படிச் சொன்னாய்? நான் வேலை செய்கிற பாங்கில் நானே கொள்ளையடிக்க வேண்டும் என்று சொல்ல உனக்கு நாக்குக் கூசவில்லையா?" என்று மிகுந்த ஆத்திரத்தோடுகேட்டார்.
"கொள்ளையடித்தால் என்ன?" என்று துடுக்காகப் பேசினான் உமாகாந்தன். "பாங்கில் இருக்கும் பணமெல்லாம் எங்கேயிருந்து வந்தது? ஏழைகளைக் கொள்ளை யடித்து அடைந்த பணத்தைப் பணக்காரர்கள் பாங்கில் போட்டு வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே?" என்றான்.
உமாகாந்தன் ஒரு தீவிர சோஷலிஸவாதி. ஆகவே அவன் விளையாட்டாக இப்படிப்