பேசவில்லை. இளமை வேகத்துடன் அன்று அவன் மனப்பூர்வமாக நம்பியதையே கூறினான்.
அவன் தகப்பனாரோ நன்றி விசுவாசம், தர்ம நியாயம் முதலிய பண்புகளில் ஊறித் திளைத்து வளர்ந்தவர். எனவே அவரால் தம் மகனுடைய பேச்சைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ரௌத்திராகாரமானார். "அட, சண்டாளா! நீ உருப்பட மாட்டாய் என்று நான் என்றைக்கோ தீர்மானித்து விட்டேன். உன் படிப்புக்கும் அதற்கும் இதற்குமென்று இத்தனை காலம் நான் செலவழித்ததெல்லாம் தண்டம். என் முகத்திலேயே இனி விழிக்காதே! வீட்டை விட்டு வெளியே போ!" என்று ஆவேசத்துடன் கத்தினார். அவர் மனைவியும் மூத்த மகனும் அவரைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றனர். அவர் பிடிவாதக்காரர். அந்தப் பிடி வாதத்தைக் குறையின்றி மகன் உமாகாந்தனும் பெற்றிருந்தான். எனவே அவன் வெளியேறி விட்டான்.
அன்றிரவு கருணாகரனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. யாரோ பாங்கியைக் கொள்ளை யடிப்பது போல் கனவு கண்டார். திடுக்கிட்டு விழித்துக் கொண்டவர் பாங்கின் வாசல் சாவி, இரும்பு அறைச் சாவி எல்லாம் பத்திரமாக இருக்கின்றனவா என்று ஒரு தடவை பார்க்க நினைத்து வீட்டின் இரும்பு பீரோவைத் திறந்தார். அவருக்கு பகீரென்றது. பாங்குச் சாவி வழக்கமாக அவர் வைக்குமிடத்தில் காணோம்! அவருக்கு உடனே உமாகாந்தன் ஞாபகம்தான் வந்தது. அவன்தான் பழி வாங்கும் நோக்கத்துடன் பாங்குச் சாவியைத் தனக்குத் தெரியாமல் கொண்டு போய் விட்டான் என்று தீர்மானித்து விட்டார். பாங்கியை நோக்கிப் பரபரப்புடன் ஓடினார். அந்த இரவு நேரத்தில் வாகன வசதி ஒன்றும் கிடைக்காது. நல்ல வேளையாக பாங்கு ரொம்ப தூரத்திலும் இல்லை. கிளை அலுவலகம் அமைந்திருந்த அதே பேட்டையில் தான் அவருக்கு வீடு. என்றாலும் வயதுக் கால்த்தில் பழக்கமில்லாத விதமாக ஓட நேர்ந்ததில் அவருக்கு ஒரேயடியாக வியர்த்துக் கொட்டி, இறைக்கவும் செய்தது. அதையொன்றும் பொருட்படுத்தாமல் அவர் விரைந்தார். பாங்கியை நெருங்கிய போது யாரோ ஒருவன் சுவர் ஏறிக் குதித்து வெளியேறுவது போல் நிழலாகத் தெரிந்தது. "யார் அது?" என்று அதட்டினார். பதில் இல்லை. ஓடிப் போய்ப் பார்த்தார். பாங்கியின் இரும்பு அறை திறந்து கிடந்தது. பணப்பெட்டி காலியாக இருந்தது. நெஞ்சம் பதறித் துடிக்க அவர் வாசலுக்கு வந்தார். வாட்ச் மேன் அடிபட்டு மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்தார். 'திபுதிபு' வென்று யாரோ ஓடும் சத்தம் கேட்டது. இவர் கூடவே, "திருடன்! திருடன்! பிடி, பிடி!" என்று கத்திக்கொண்டு ஓசை கேட்ட பக்கமாகச் சாலையில் விரைந்தார்.