"உமாகாந்த்! நீ செய்வது கொஞ்சமும் சரியில்லை. உன் வாழ்க்கையைத்தான் ஏதோ அண்ணனுக்காகவும், தேசத்துக்காகவும் தியாகம் செய்வதாகக் கூறிக்கொண்டு பாழடித்துக் கொண்டாய். பவானியின் வாழ்க்கையையும் குட்டிச்சுவராக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது?" என்று கோபமாகக் கேட்டார் குணசேகரன்.
"மாமா! இது என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? ஒரு பெண் தன் மனம் விரும்பியவனுடன் இருந்து அவன் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வது தவறா? அவள் தன் மாமாவின் சொற்படி கேட்டு ஒரு கொள்ளைக்காரனை, தம்பியைக் குற்றவாளி யாக்கிய கோழையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் வாழ்க்கை குட்டிச்சுவராகாதா?"
"கோவர்த்தனன் அப்படிப்பட்டவர் என்பதற்கு என்ன சாட்சி? இவன் வார்த்தை தானே?"
"நீதிமன்றத்துக்குத்தான் மாமா சாட்சியங்கள் வேண்டும். உள்ளம் என்கிற நியாய ஸ்தலத்துக்கு மனச்சாட்சியே போதும்" என்றாள் பவானி நாத் தழுதழுக்க.
"கோவர்த்தனனை நீ கல்யாணம் செய்து கொள்வதா? அவன் இந்த ஊரில்தான் இருக்கிறானா?" என்று உமாகாந்த் அதிசயத்துடன் கேட்டான்.
"ஆமாம் உமா! நீங்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றோ அல்லது தப்பித்துக் கொண்டோ வரும்போது நேரே கல்கத்தா சென்று அங்கு என்னைப் பற்றி விசாரித்து என்னைத் தேடிக் கொண்டு இங்கே தான் வருவீர்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் இந்த ஊருக்கு வந்து சதா என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். என்னை எப்படியாவது கல்யாணம் செய்து கொண்டு விட்டால் பிறகு இந்த ஜன்மத்தில் உங்களால் அவருக்கு எந்த ஆபத்தும் நேராது அல்லவா? அந்த நிம்மதியைப் பெறுவதற்காகத் தம்மாலான முயற்சிகளை யெல்லாம் செய்து பார்க்கிறார். நானும் அவர் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து இதுநாள் வரை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறேன்.
"உங்களைப் பின் தொடர்ந்து காயப்படுத்திய சி.ஐ.டிக்கள் கூட அவருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களை 'அடிபட்ட புலி' என்று வர்ணித்து உங்களுக்கு