அடைக்கலம் கொடுப்பது பெரிய குற்றம் என்று என்னை எச்சரித்து விட்டுப் போனார். அப்போது நீங்கள் தூக்க மருந்து சாப்பிட்டுவிட்டு மாடி அறையில்தான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்."
"நான் இங்கிருப்பது தெரிந்து விட்டதா அவனுக்கு?" கலவரத்துடன் கேட்டான் உமாகாந்தன்.
"இல்லை. ஆனால் நீங்கள் இங்கே என்னைத் தேடி வரலாம்; தஞ்சம் புகலாம் என்று சந்தேகிக்கிறார்."
"பவானி! நான் இனி இங்கே தொடர்ந்து இருப்பது ரொம்ப ஆபத்து. எனக்கு மட்டுமல்ல. உனக்கும் மாமா குணசேகரனுக்கும் கூடத்தான். எனக்கு விடை கொடு! நான் கிளம்புகிறேன்."
"நான் கேட்ட வரம்?"
"வரம் கேட்பவர் தாழ்ந்த நிலையிலும் வரம் கொடுப்பவர் உயர்ந்த நிலையிலும் இருக்க வேண்டும் பவானி. இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தவன்."
இந்தச் சமயத்தில் வாசல் கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்டது. "பவானி, பவானி! குணசேகரன் ஸார்!" என்று கூப்பிடும் குரலும் அடுத்து ஒலித்தது.
"கல்யாணம் அல்லவா வந்திருக்கிறான்! நீங்கள் இங்கேயே பேசிக் கொண்டிருங்கள். நான் கீழே போய் என்ன விஷயம் என்று கேட்டு அவனை அனுப்பி விட்டு வருகிறேன்" என்றார் குணசேகரன்.
"நாம் அதிகாலையில் எழுந்து காரில் புறப் படலாம். இப்போது சீக்கிரம் படுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பவானி உமாகாந்தனைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்கு அழைத்துப்போனாள்.
கீழே சென்ற குணசேகரனிடம் "பவானி எங்கே?" என்று வினவினான் கல்யாணம்.
"அவள் மாடியில் படுத்துக் கொண்டு விட்டாள். என்ன விஷயம்?" என்றார் குணசேகரன்.