Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 58 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 58. -- ரங்கநாதன் மனமாற்றம்.
கமலாவிடமும் அவள் தம்பி விசுவத்திடமும் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பிய கல்யாணத்தின் மனம் ஒரு நிலையில் இல்லை. 'நீங்கள் பவானியிடம் காதல் கொண்டிருக்கலாம்; பவானி அக்கா வேறு ஒருவர்மீது ஆசை வைத்திருக்கலாம்' என்று கமலா கூறியது திரும்பத் திரும்ப அவன் நினைவுக்கு வந்து அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. 'அது உண்மையாக இருக்குமா? அதனால்தான் தன் காதலை ஏற்கப் பவானி மறுத்துவிட்டாளா? கமலா கூறியது நிஜமாகத்தான் இருக்கும். இல்லாமலா 'வேண்டுமானால் அவள் வீட்டுக்கு இப்போதே போய்ப் பாருங்களேன்!' என்று கமலா ஒரு வேகத்தோடு கூறினாள்? கூடவே, 'பவானி அக்காவிடம் ஏதும் கேட்டுவிடாதீர்கள். இது பரம ரகசியம்' என்றும் கெஞ்சினாளே! சீச்சீ! இதிலெல்லாம் என்ன ஒளிவு மறைவு வேண்டிக் கிடக்கிறது? பவானி ஒருவனை விரும்பினால் அது பற்றி வெளிப்படையாகக் கூறி அவனை மணந்து கொள்வதுதானே? யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவனை வீட்டுக்குள் வைத்திருந்து உபசரிப்பதென்பது எவ்வளவு கேவலம்? இதைச் சும்மா விடக்கூடாது. பவானியைக் கேட்டுவிடத்தான் வேண்டும். ஆனால் எனக்கு எப்படி விவரம் தெரிய வந்தது என்று அவள் கேட்டால்? கமலாவை இதில் இழுப்பானேன்? வேறு ஏதோ காரணமாகப் பவானி வீட்டுக்குப் போவது போலவும் அங்கே அவள் காதலனை யதேச்சையாகச் சந்தித்துவிட்டது போலவும் நடிக்க வேண்டியதுதான்! என்னை பவானி மணந்து கொள்ளாவிட்டால் போகட்டும், பாதகம் இல்லை; அதற்காக அவள் ஓர் அந்நியனைத் தன் வீட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு கொஞ்சிக் குலாவுவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருக்க முடியாது!'
பவானி கல்யாணத்தின் காதலை ஏற்காததால் அவன் மனம் விகாரப்பட்டுப் போயிருந்தது. பவானியின் ரகசியக் காதலனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தான். 'உன் ரகசியம் அம்பலமாகி விட்டது பார்' என்று காண்பித்துக்கொள்வதில் தன் பழிவாங்கும் உணர்ச்சிக்குத் தீனி போட்டுக் குரூரத் திருப்தியடைய ஆசைப் பட்டான். ஆனால் இதனை யெல்லாம் அவன் உள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. வேறு ஏதோ நல்ல சமாதானங்களைக் கற்பித்துக் கொண்டது!
'என்ன காரணத்தைக் கூறிக் கொண்டு இப்போது அவள் வீட்டுக்குச் செல்வது?' என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதே போல