ரங்கநாத முதலியாரிடமிருந்து அழைப்பு வந்தது! ஸ்தல யாத்திரை கிளம்பியிருந்த அவர் பாதியிலேயே திரும்பி வந்திருந்தார். வந்ததும் வராததுமாகக் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆளிடம் சொல்லி அனுப்பினார். கல்யாணமும் பரபரப்படைந்தவனாக அவர் பங்களாவுக்குப் போய்ச் சேர்ந்தான்.
ரங்கநாத முதலியாரின் மனப் போக்கில் பெரிய மாறுதல் காணப்பட்டது. அவர் இரண்டொரு க்ஷேத்திரங்களுக்குத்தான் போனாராம். அதற்குள் ஞானோதயம் ஏற்பட்டு விட்டதாம். மேலே யாத்திரையைத் தொடராமல் திருப்பி விட்டாராம். மதுரை மீனாட்சிக்குத் தீபாராதனை நடக்கும் சமயம் மனத்தில் உதித்த யோசனையை நிறைவேற்றிவிட்டுப் பிறகுதான் யாத்திரையை மீண்டும் தொடரப் போகிறாராம்!
"அப்படி என்ன புரட்சிகரமான எண்ணம் உதயமாகி விட்டது உங்களுக்கு?" என்று கேட்டான் கல்யாணம். "சொல்கிறேன் கேள். கமலா எவ்வளவு சின்னப் பெண்! எனக்குப் பெண்ணாகவே இருக்கக் கூடியவள் இல்லையா?'
"இல்லை, பேத்தியாகவே விளங்கக் கூடியவள்" என்றான் கல்யாணம்.
"ரொம்பச் சரி. அப்படித்தான் எனக்கும் தோன்றியது. என்னுடைய பேத்திக்குச் சமதையாக எண்ண வேண்டியவளை நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்தது எவ்வளவு பெரிய பாவம்! ஆனால் அதையே நான் புண்ணியமென்றுகூட நான் கருதினேன். அந்தக் குடும்பத்துக்கு நன்மை செய்யவே அவளைத் திருமணம் செய்து கொள்வதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்."
"அவர்களது ஏழைமை நீங்கும் என்று கணக்குப் போட்டிருப்பீர்கள். ரொம்பப் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள்."
"அதுமட்டுமில்லை கல்யாணம்; அந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாகச் சொன்னேன். டாக்டருக்குப் படித்து மேல்நாடுகளுக்குக்கூட அவள் பயற்சி பெறச் செல்லலாம் என்று ஆசை காட்டினேன். அவள் திரும்பி வந்ததும் இங்கே ஒரு தர்ம ஆஸ்பத்திரி தொடங்க உதவுவதாகவும் கூறினேன். ஆக மொத்தம் அவளை மணந்து கொள்வதன் மூலம் அவளுக்கு மட்டுமின்றி இந்த ஊருக்கே பெரிய சேவை புரிவதாக என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்."