Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 59 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 59 -- கல்யாணத்துக்கு அவமானம்.
பவானியின் மாமா குணசேகரன் தன்னைத் தடுப்பதைப் பொருட்படுத்தாமல் தடதடவென்று மாடிப் படிகளில் ஏறினான் கல்யாணம்.
அதற்கு முன் மொட்டை மாடியிலிருந்து உமாகாந்தைக் கைத்தாங்கலாகப் பற்றிப் படுக்கை அறைக்குள் அழைத்துப் போயிருந்தாள் பவானி. கதவைச் சாத்தினாள், ஆனால் தாளிடவில்லை. மாமா குணசேகரன் கல்யாணத்தை வாசலிலேயே நிறுத்தச் சாக்குப்போக்குக் கூறி அனுப்பி விடுவார் என்ற நம்பிக்கையில் உமாகாந்தைப் படுக்கவைத்தாள். "நாளைக் காலையில் நாம் சீக்கிரமே புறப்பட்டு விடலாம். நிம்மதியாகத் தூங்குங்கள்" என்றாள். உமாகாந்தன் அவள் கரத்தை எடுத்துக் கன்னத்தில் ஒத்திக் கொண்டு உள்ளங்கையில் இதழ்களைப் பதித்தான்.
அதே சமயம், "பவானி! பவானி!" என்று அழைத்தபடியே கதவைப் 'படா' ரென்று திறந்து கொண்டு உள்ளே வந்தான் கல்யாணம். பவானியையும் கமலா குறிப்பிட்ட அவள் காதலனையும் ஒருசேரப் பார்த்து ஓரிரு விநாடிகள் பிரமித்து நின்றான்!
பின்னாலேயே குணசேகரன் இரைக்க இரைக்க ஓடி வந்தார். "நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் என்னை ஒதுக்கித் தள்ளி விட்டு வந்திருக்கிறான், பவானி!" என்றார்.
பவானி திகைப்பு நீங்கியவளாகக் கோபத்துடன் எழுந்து நின்றாள். "யூ ஸில்லி இடியட்! கெட் அவுட்!" என்றாள்.
"ஆமாம், நான் ஸில்லி இடியட்தான்! தெய்விகமான உன் பெயரையும் அழகான வெளித்தோற்றத்தையும் அறிவாற்றலையும் பார்த்து ஏமாந்து போனேன் அல்லவா? அத்தனைகத்தனை உன் மனம் விகாரமானது என்பது எனக்குப் புரியாமல் போய்விட்டது அல்லவா?"
"கெட் அவுட், யூ மானர்லெஸ் புரூட்!" என்று கத்தியவாறு ரௌத்திராகாரத்துடன் இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்தாள் பவானி.