"பேஷாகப் போகிறேன்! ஆனால் முதலில் நான் வந்த காரியத்தைக் கூறிவிட்டு..."
அவனைத் தொடர விடாமல் பவானி, "பேசாதே! நீ சொல்லும் ஒரு வார்த்தையைக்கூட நான் கேட்க விரும்பவில்லை" என்றாள். "மாமா! எதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? கிக் ஹிம் அவுட்!"
பவானி முன்னேற முன்னேறக் கல்யாணம் அவளுக்கு இடம் கொடுத்துப் பின்வாங்கி அறைக்கு வெளியே வந்திருந்தான். மாடிப்படிகளை நெருங்கியும் விட்டான். ஆனால் அவன் பார்வை பார்வை மட்டும் பவானியை நோக்கித்தான் இருந்தது. முதுகுப் புறம்தான் மாடிப் படிகளைப் பார்க்க இருந்தது. "பவானி!" என்று மீண்டும் ஏதோ கூற ஆரம்பித்தான் கல்யாணம். இப்போது அவனுக்குத் தான் அத்துமீறிப் பிரவேசித்தது தவறு என்றும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தோன்றிவிட்டிருந்தது. ஆனால் பவானி எதையும் செவி மடுக்கும் மனநிலையில் இல்லை. கோபத்தின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தாள். "ஏனய்யா? உனக்கு வெட்கம் மானம் இல்லையா? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினால் தான் போவாயா?" என்று கேட்டபடியே மேலும் இரண்டடி எடுத்து வைத்தாள்.அவளுக்கு வழி விட்டு ஓரடி பின்னால் நகர்ந்தான் கல்யாணம். அவ்வளவுதான், மாடிப் படியில் இசகு பிசகாகக் காலை வைத்துத் திபுதிபுவென்று உருண்டு விழுந்தான். படிக்கட்டில் இடையிலிருந்த ஒரு திருப்பத்தில்தான் அவன் சலனம் தடைப்பட்டு நின்றது.
சுவரில் மோதிக் கொண்டதில் அவன் மண்டையில் 'விண், விண்'ணென்று வலி தெறித்தது. ஆனால் அதை விடவும் அதிகமாக இருந்தது அவமானம் பிடுங்கித் தின்றதால் வேதனை. மிச்சமிருந்த படிக்கட்டில் விடுவிடென்று இறங்கி, வாசலைத் தாண்டி, தோட்டத்தைக் கடந்து, வீதியில் தான் நிறுத்தியிருந்த காரில் ஏறி, அதனைக் கிளப்பினான். அந்தச் சமயம் பார்த்து அது கிளம்ப மறுத்து அவன் பொறுமையைச் சோதித்தது. "சீ நன்றி கெட்ட ஜன்ம்மே! இப்படி கழுத்தறுப்பதற்குப் பவானியுடம் கற்றுக்கொண்டாயா?" என்று ஆவேசத்துடன் கேட்டுக் கீழே இறங்கிப் 'படா'ரென்று கதவைச் சாத்தி, போதாக் குறைக்குக் காரை ஓர் உதையும் விட்டான்!
நடக்க ஆமர்பித்த கல்யாணத்தை அவன் கால்கள் நேரே மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் வீட்டுக்கு அழைத்துப் போயின. அவர் வராந்தாவில் அமர்ந்து நிலாவை வெறித்து நோக்கியபடி