எட்டாவது கோப்பை ஸ்காட்ச் விஸ்கியைக் கண்டத்தில் கவிழ்த்துக் கொண்டிருந்தார்.
'எதற்காக இங்கு வந்து சேர்ந்தோம்?' என்று அவரை நெருங்கிப் பார்த்ததும்தான் யோசித்தான் கல்யாணம். "இனம் இனத்தைச் சேரும் என்பதற்கு ஏற்பப் பவானியால் அவமதிக்கப் பட்ட நீ பவானியின் நிராகரிப்பால் குன்றிப் போயிருக்கிற கோவர்த்தனனைத் தேடி வந்திருக்கிறாய் என்று அவன் மனம் சரியாகவே பதில் கூறிற்று.
ஆனால் "என்ன கல்யாணம்? எங்கே வந்தாய்?" என்று கோவர்த்தனன் கேட்ட போது, "சும்மாத்தான் இப்படி வந்தேன்" என்றுதான் சொன்னான் கல்யாணம்.
"தமிழ் அகராதியிலிருந்தே 'சும்மா' என்ற வார்த்தையை நீக்கிவிட வேண்டும் என்றார் கோவர்த்தனன்.
"என்ன சார் அப்படிச் சொல்லிவிட்டீர்கள்! 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கிற திறமரிது, அரிது!' என்று தாயுமானார் அலறியிருக்கிறாரே.
"அவர் சும்மா இருப்பதுதானே? எதற்காக அத்தனை பாடல்களை எழுதி வைத்து நம் பிராணனை வாங்குகிறார்? போனால் போகட்டும். நீ வந்த காரியத்தைச் சொல்லு!"
"காரியம் என்று அப்படி ஒன்றுமில்லை. உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்."
"பார்த்தாயிற்று அல்லவா? போகலாமே?"
"இன்றைக்கு என் ஜாதக விசேஷம் போலிருக்கிறது, எங்கே போனாலும் வரவேற்பு ஒரு மாதிரி இருக்கிறது."
இன்னும் எங்கே போயிருந்தாய்?"
"பவானி வீட்டுக்குப் போனேன்."