"எனக்குப் பிடிக்காத காரியம். தெளிவாகச் சொல்கிறேன். இனிமேல் பவானி வீட்டுக்குப் போவதை நீ நிறுத்தி விடு!"
"தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது!"
"அப்படி யென்றால்"
"இனிமேல் அவள் வீட்டுக்குப் போவதில்லை என்று நானும் சற்று முன்புதான் முடிவு செய்தேன்."
"ஓ! பவானியே வாசல் பக்கத்துக்கு வழிகாட்டி விட்டாளா? அவள் சொன்ன உடனே கிளம்பி விட்டாயா? இல்லை வேலைக்காரனைக் கூப்பிட வேண்டியிருந்ததா?"
"அவ்வளவுக்கு நான் வைத்துக் கொள்வேனா? மாடிப் படியில் பின்னங் கால்களை வைத்தேன்; நேரே கீழே வந்து சேர்ந்து விட்டேன்!"
கோவர்த்தனன் சிரித்து விட்டு "சரி, இனிமேலாவது அந்தப் பக்கம் தலை காட்ட வேண்டாம்" என்றார். பிறகு "பவானிக்கு உடம்பு எப்படி இருக்கு? தேவலமா?" என்று வினவினார்.
"உடம்பா? நான் பார்த்தவரையில் சரியாகத்தானே இருந்தாள்? என்றான் கல்யானம்.
"இல்லை, இல்லை! உனக்குத் தெரியாது. பவானிக்கு இன்ஃபுளூயென்ஸா. அதனால் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்று சொல்லி அனுப்பினாள். அவள் சம்பந்தப்பட்ட கேஸைக்கூட இரண்டு வாரங்கள் ஒத்திப் போட்டிருக்கிறேன். நானே அவளைப் போய் விசாரிப்பதாக இருந்தேன். ஆனால் டாக்டர்கள் 'விசிட்டர்கள் யாரும் வராமலிருந்தால் நல்லது' என்று உத்தரவிட்டிருப்பதாக அவள் மாமா சொன்னார். அதனால்தான் போகவில்லை."
"ஆமாம், ஆமாம்! இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்கிறார். நானும் கூடப் பார்த்தேன்!"