கல்யாணம் கனத்த இதயத்துடன் கார் ஓட்டிச் சென்றான். பவானிக்கும் கமலாவுக்கும் தான் பெரிய துரோகம் இழைத்து விட்டதாக அவன் மனம் இடித்துக் காட்டியது. அதற்குப் பரிகாரமாகத் தான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தான். ஒரு வழியும் புலப்படவில்லை.
"சீக்கிரம்! சீக்கிரம்! வேகமாகப் போ!" என்று துப்பாக்கி முனையை அவன் தலையில் தட்டித் துரிதப்படுத்தினார் கோவர்த்தனன்.
பவானி வீட்டு வாசலில் கார் நின்ற சமயம் கோவர்த்தனனுக்கு முன்பாகக் கல்யாணம் பாய்ந்து ஓடினான் பவானியை எச்சரிக்க விரும்பி.
"தம்பி! இப்பத்தானே பவானியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாய்! அரை மணி கூட ஆகவில்லையே! அதற்குள் திரும்பி வந்திருக்கிறாயே?" என்றார் மாமா குணசேகரன்.
"இந்தத் தடவை உன் பாச்சா ஒன்றும் என்னிடம் பலிக்காது. அப்போ கொஞ்சம் ஏமாந்துட்டேன். மறுபடியும் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டு மாடிப் படிகளில் பாய்ந்தேறப் பார்க்காதே!
எனக்கு கொஞ்சம் மல் யுத்தப் பயிற்சி உண்டு. முறுக்கிப் பிழிந்து கொடியிலே உலர்த்திடுவேன்" என்று கோபமாகக் கூறி வந்தவர், மாஜிஸ்திரேட் கோவர்த் தனன் துப்பாக்கி சகிதம் உள்ளே வருவதைப் பார்த்து மௌனமானார்.
"பவானி எங்கே?' என்றார் கோவர்த்தனன் தடித்த குரலில்.
"தூங்குகிறாள். நான் தான் சொன்னேனே உங்களிடம். அவளுக்கு ஜுரம் என்று. அவளைத் தொந்தரவு செய்வதற்கில்லை.
"வேணாம். அவள் ஓய்வாக இருக்கட்டும். ரெஸ்ட் இஸ் குட் ஃபார் ஹர். மிஸ்டர் இன்புளூயன்ஸா எங்கே? அவனை அழைத்துவா!"
"இன்புளூயன்ஸாவாவது? இலுப்பக்காவாவது? யாரை அழைத்து வருவது? என்ன உளறுகிறீர்?"