என்றார் குணசேகரன். ஆனால் மாஜிஸ்திரேட் கூறியது அவருக்குப் புரியாமல் போகவில்லை. அவர் கரத்தில் இருந்த துப்பாக்கி அவரை மிரட்டியது. கோவர்த்தனனின் பதவி அவரை அச்சுறுத்தியது.
"மிஸ்டர் குணசேகரன்! என்னை ஏமாற்றப் பார்க்காதீர்!" என்ற மாஜிஸ்திரேட் ஒவ்வொரு அறையாக நோட்டம் விட ஆரம்பித்தார். கல்யாணம் குடி போதையில் அவர் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விடப்போகிறாரே என்ற கவலையில் பின்னோடு சென்றான்.
மாடியில் பவானியும் அவள் காதலனும் தங்கியிருந்த அறை காலியாக இருப்பதைப் பார்த்ததும் கல்யாணத்துக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ஆனால் மாஜிஸ்திரேட் பவானியின் அறையை அனுபவப்பட்ட பாணியில் ஆராயத் தொடங்கினார். டிரெஸ்ஸிங் டேபில் இழுப்பறைகளைத் திறந்து பார்த்தார். மேஜை டிராயர்களைக் குடைந்தார். படுக்கையைப் புரட்டிப் போட்டார். திரைச் சீலைகளுக்குப் பின்னால் கண்ணோட்டம் செலுத்தினார். அறையின் ஒரு மூலையிலிருந்த அழுக்குத் துணிக் கூடையைக் காலால் உதைத்துத் தள்ளி உருட்டினார். திறந்து கொண்ட அதனுள்ளிருந்து பவானியின் புடவை ஒன்றுடன் வெள்ளைக் கதர்த்துணியும் எட்டிப் பார்த்தது. "ஆகா!" என்று வியப்பொலி எழுப்பியவாறு கோவர்த்தனன் அந்த கதர்த் துணியை வெளியே உருவினார். அழுக்குப் படிந்த வெள்ளைக் கதர் ஜிப்பா, பைஜாமா வெளிப் பட்டது. ஜிப்பாவின் ஒரு பக்கத் தோளில் ரத்தக் கறை படர்ந்து படிந்திருந்தது!
"தே ஹாவ் எஸ்கேப்ட்! தே ஹாவ் எஸ் கேப்ட்" என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டபடியே கீழே ஃபோன் இருந்த அறையை நோக்கி விரைந்தார் கோவர்த்தனன்.
பவானியின் புத்திசாலித்தனத்தை தமக்குள் மெச்சிக் கொண்டார் அவள் மாமா. கல்யாணம் வந்துவிட்டுப் போன மறு கணமே அவள், "மாமா! இந்த மனுஷன் ஏற்கனவே என்னிடம் காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்தவர். போதாக் குறைக்கு இங்கே இப்போது அவமானப்பட்டுத் திரும்புகிறார். அதனால் குயுக்தியாக அவருக்கு ஏதாவது செய்யத் தோன்றும். ஒரு கல்யாணத்தை நிறுத்த பஸ் ஏற்பாடு செய்துகொண்டு போன வராயிற்றே! அதனால் இப்போது என்னை வம்பில் மாட்டி வைக்க அவர் நினைத்தால் வியப்பதற்கில்லை. நானும் உமாவும் நாளைக் காலைவரையில் காத்திருக்க முடியாது. இப்போதே உடனே புறப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு மளமளவென்று ஒரு ஸூட் கேஸில் அவசியமான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டாள். வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டாள். குண சேகரனிடம் ஒரு 'செக்'