"மிஸ்டர்! என் வேலை முடிந்தது. நான் இதோ வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு 'டிப்' கொடுத்துவிட்டுப் போகிறேன். பவானி இரண்டு வருஷங்கள் சிறை வாசம் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு உபாயம்தான் இருக்கிறது.
அந்தப் பயல் - அதாவது மிஸ்டர் இன்ஃபுளூயன்ஸா - ஒரு தேசத் துரோகி, சிறையிலிருந்து தப்பி வந்தவன் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றும் அவனை இதற்கு முன் தன் வாழ் நாளில் தான் பார்த்ததே இல்லை என்றும் பவானி எழுதித் தரவேண்டும். காயம் பட்டிருக்கும் ஒருவனுக்குக் கருணை காட்டும் எண்ணம் தவிர தனக்கு வேறு ஓர் உள் நோக்கமும் இல்லை என்று வாக்குமூலம் தரவேண்டும். அவன் தன்னைப் பலவந்தமாகக் கார் ஓட்டி வருமாறு பணித்தான். தப்பிக்க உதவவில்லையானால் கொன்று விடுவதாக மிரட்டினான் என்று எழுத வேண்டும். புரிந்ததா? இப்படி ஒரு 'ஸ்டேட்மெண்ட்' எழுதி மேன்மை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கோரினால் அவளை உடனே விடுவித்துவிட நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படி ஒரு வாக்குமூலம் எழுதி வாங்கும் பொறுப்பு உம்முடையது. இதைச் செய்யாமல் சட்டப்படி காரியம் நடக்கட்டும் என்று பேசாமல் இருந்தீரானால் உமது மருமகளை மறுபடியும் இரண்டோ மூணோ வருஷங்களுக்குப் பிறகுதான் கண்ணால் பார்க்க முடியும். புரிந்ததா? எவ்வளவு சீக்கிரம் அந்த வாக்குமூலத்தைப் பெற்று வருகிறீரோ, அவ்வளவுக்கு நல்லது!"
இவ்விதம் கூறிவிட்டு மாஜிஸ்திரேட் வாசலில் நின்ற தமது காரில் ஏறிச் சென்று விட்டார். வரும்போது தம்முடன் வந்த கல்யாணத்தை அவர் அடியோடு மறந்துதான் விட்டாரோ அல்லது வேண்டுமென்றே அலட்சியம் செய்தாரோ, உபசாரத்துக்குக்கூட அவன் தம்முடன் வருகிறானா என்று கேட்காமல் போய்விட்டார்.
அவர் போனதும் கல்யாணம் குணசேகரன் பக்கம் திரும்பி "ஸார்.....!" என்று ஆரம்பித்தான்.
"யூ ராஸ்கல்! நீ ஏண்டா இன்னும் இங்கே நிற்கிறாய்!" என்று எரிந்து விழுந்தார் அவர்.
கல்யாணம் பேசாமல் திரும்பி வருத்தத்தோடும் ரோஷத்தோடும் விடுவிடுவென்று நடந்து